மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற அதிமுக களஆய்வுக் கூட்டத்தில் நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாநகர் மாவட்ட அதிமுக கள ஆய்வுக்கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள சேம்பர் ஆஃப் காமர்ஸ் வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான செல்லூர் ராஜு தலைமை வகித்தார். இதில் முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செழியன் என்பவர் மேடையில் ஏறி பேச முயன்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நிர்வாகிகள் அவர் மீது தாக்குதல் நடத்தி கீழே தள்ளியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த செழியன் ஆதரவாளர்கள், தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அமைச்சர்கள் முன்னிலையில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களை சமரசம் செய்தார். ஏற்கனவே நெல்லை மற்றும் கும்பகோணத்தில் நடைபெற்ற அதிமுக களஆய்வுக்கூட்டங்களில் அதிமுகவினர் மோதிக்கொண்டது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.