செங்குன்றத்தில் தனியார் பிலாஸ்டிக் மறுசுழற்சி ஆலையில் அதிகாலையில் திடீர் தீ விபத்து. 5 வாகனங்களில் வந்த தீயணைப்பு அவீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் கோமதி அம்மன் நகரில் தனியாருக்கு சொந்தமான பழைய பிலாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்யும் குடோன் இயங்கி வருகிறது. இங்கு இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பிலாஸ்டிக் பொருட்கள் என்பதால் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது.


இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் செங்குன்றம், மணலி, அம்பத்தூர் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரையும், ரசாயன நுரையையும் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் விட்டுவிட்டு மிதமான மழையும் பெய்ய தொடங்கிய நிலையில் தீ கட்டுக்குள் அடங்கியது.மீண்டும் தீவிரம் அடையாமலும், அருகில் பரவாமல் கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்து குறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா, அல்லது ஏதேனும் நாச வேலை காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.


