டங்ஸ்டன் கனிம சுரங்க ஒப்பந்தம் ரத்து…ஒப்பந்தத்தை ரத்து செய்ய காரணமாக இருந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து மேலூர் பகுதி முழுவதும் வைக்கப்பட்டுள்ள பாதகைகள் மற்றும் சுவரொட்டிகள்
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் வரவிருந்த டங்ஸ்டன் கனிம சுரங்க ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு முழுமையாக ரத்து செய்த நிலையில் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இந்த திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என சட்டமன்றத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து திமுகவினர் மேலூர் தாலுகா முழுவதும் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் வைத்துள்ளனர்.
மேலூர் அருகே அரிட்டாபட்டி வல்லாளபட்டி மற்றும் நாயக்கர்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் 5000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தை அடுத்து இந்த ஒப்புதலை ஒன்றிய அரசு முழுமையாக ரத்து செய்துள்ளது.
இந்நிலையில் இந்த திட்டத்தை தமிழ்நாட்டிற்குள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனவும், நான் உயிரோடு இருக்கும் வரை திட்டத்திற்கு அனுமதி வழங்க மாட்டேன் என சட்டமன்றத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து மேலூர் பென்னிகுயிக் பேருந்து நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் திமுகவினர் விளம்பர பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர்.
இதனிடைய நாளை அரட்டாபட்டி கிராமத்திற்கு வரவிற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வரவேற்க முக்கிய சாலைகளில் கொடி மற்றும் வரவேற்பு பதாகைகளை வைத்து திமுகவினர் தயாராகி வருகின்றனர்.