Homeசெய்திகள்கட்டுரைராமதாஸ் - அன்புமணி மோதலின் பின்னணி? உடைத்துப் பேசும் பத்திரிகையாளர் மணி!

ராமதாஸ் – அன்புமணி மோதலின் பின்னணி? உடைத்துப் பேசும் பத்திரிகையாளர் மணி!

-

- Advertisement -

வடதமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாமல் இருப்பதற்கு மருத்துவர் ராமதாஸ் தான் காரணம் என்றும், பாமகவில் பிளவு ஏற்பட்டால் அந்து இந்துத்துவா சக்திகளுக்கு சாதகமாகி விடும் என்றும் மூத்த பத்திரிகையாளர் மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் செய்தியாளர் சந்தித்து அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். இந்நிலையில், தந்தை  – மகன் மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்பது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- அன்புமணி ராமதாஸ் உடனான மோதல் விவகாரத்தில் நீயா? நானா? என்று பார்த்து விடலாம் என்கிற முடிவுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வந்துவிட்டார். “நான் வளர்த்த பாமகவுக்கு, நான் தலைவராக இருக்கக்கூடாதா…?” என்று இறைஞ்சும் தொனியில் ராமதாஸ் கேட்கிறார். நான் ஏற்கனவே சொன்னது போல இது கொள்கை பிரச்சினையோ, சித்தாந்த பிரச்சினையோ கிடையாது. பாஜக உடன் கூட்டணிக்கு செல்வது தொடர்பான பிரச்சினையும் கிடையாது. அரசியல் அல்லாத தனிமனித விருப்பு வெறுப்புகள் மற்றும் சில வளங்களை பிரித்துக்கொள்வது தொடர்பாக தந்தை – மகன் இடையே ஏற்பட்டுள்ள சண்டையாகும். இது எவ்வளவு பெரிய அவலமாக இருக்கிறது.

மருத்துவர் ராமதாஸ் பக்கம் நியாயங்கள் இருக்கிறது. அதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் 87 வயது முதியவர், எதற்காக தனது மகனுக்கு எதிராகவே போர்க்கொடி தூக்குகிறார்? அவர் விஷயத்திற்கு வராமல் வெளியிலேயே சுத்துகிறார். ஆனால் உண்மையான பிரச்சினை என்பது வளங்களை பிரித்துக் கொள்வதில் குடும்பத்திற்கு உள்ளே இருக்கிற தகராறு ஆகும். அதிகார மையங்களை திருப்திபடுத்த ராமதாஸ் விரும்புகிறார். அன்புமணி, அந்த வளங்கள் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். வெளிப்படையாக சொல்வதென்றால் இது தான் உள்ளே நடைபெறுகிற விஷயமாகும்.

ஆர்எஸ்எஸ்-காரரான குருமூர்த்தியும், பாஜக நிலைப்பாட்டை எடுத்த சைதை துரைசாமியும் வெளிப்படையாக ராமதாசையும், அன்புமணியையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அப்போது பாஜக உடன் கூட்டணி செல்வதில் எந்த பிரச்சினையும் கிடையாது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக – பாஜக கூட்டணிக்கு செல்வதை தவிர  வேறு கூட்டணி வாய்ப்புகளும் பாமகவுக்கு கிடையாது. மருத்துவர் ராமதாஸ் தலைவர் பதவி வேண்டும் என்று சொல்கிறார்.  எதற்காக உங்களுக்கு தலைவர் பதவி வேண்டும்? நான் இருக்கும் வரை எனக்கு தலைவர் பதவி என்று சொன்னால் அதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ராமதாஸ், தேர்தல் வரை தலைவர் பதவி வேண்டும். அதற்கு பிறகு அன்புமணியிடம் கொடுத்து விடுகிறேன் என்கிறார். அப்போது, வெளிப்படையாக அவர் சொல்கிறார். இது வளங்களை பிரித்துக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சண்டை என்று. அப்போது தேர்தல் காலத்தில் வரக்கூடிய வளங்களை நான் குடும்பத்தில் அதிகார மையங்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு, ஓய்வுபெற்று விடுகிறேன் என்கிறார்.

கூட்டணி முடிவுகளில் அன்புமணி தவறு செய்ததால் ராமதாஸ் கட்சியை தன்வசம் எடுத்துக்கொள்கிறார் என்பது உண்மையில்லை. ஏனென்றால் பாமகவுக்கு வேறு எந்த கூட்டணி வாய்ப்புகளும் கிடையாது. அவர்கள் அதிமுக – பாஜக கூட்டணிக்குதான் சென்றாக வேண்டும். திமுக ஒருபோதும் இவர்களோடு கூட்டணி வைக்காது. பாமகவுக்காக ஒருபோதும் ஸ்டாலின் விசிகவை இழக்க மாட்டார். 2019 , 2021 மற்றும் 2024ல் சிறப்பான ஒரு ஒரு கூட்டணியை கட்டமைத்து, கலைஞர் கூட செய்யாத அளவுக்கு எல்லோரையும் ஸ்டாலின் அரவணைத்து சென்று கொண்டிருக்கிறார். 2026 மிக முக்கியாமான தேர்தல் என்பதால் ஸ்டாலின் அந்த தவறை ஒருபோதும் செய்ய மாட்டார். எனவே அங்கு பாமகவுக்கு வாய்ப்பு இல்லை. இது மருத்துவர் ராமதாசுக்கு நன்றாகவே தெரியும். இந்த பிரச்சினை கூட்டணி தொடர்பானதோ, தொகுதி பங்கீடு தொடர்பானதோ கிடையாது. இது அவர்களின் வீழ்ச்சியாகும். மிகவும் மோசமான கட்டத்தை நோக்கி அவர்கள் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பாமகவின் வீழ்ச்சி என்பது 2009 மார்ச் மாதம் 3 மாதம் தொடங்கியது. மன்மோகன் சிங்கின் 5 ஆண்டு கால ஆட்சி முடிந்து, 2023 மார்ச் ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அறிவிப்பு வருகிறது. அன்புணி, மார்ச் 2ல் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மார்ச் 3ஆம் தேதி ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணியில் சேர்ந்தார். அன்றைக்கு தொடங்கியது சனி. அதிமுக கூட்டணியில் 7 சீட்டுகளை வாங்கி படுதோல்வி அடைந்தனர். சட்டமன்றத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணியில் இருந்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் சட்டமன்றத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஓடி வந்தார்கள். 30 சீட்டுகள் வாங்கி 3ல் வெற்றி பெற்றனர். அதற்கு பிறகு ராமதாஸ் சாதி அரசியலை கையில் எடுத்தார். தருமபுரி இளவரசன் – திவ்யா காதல் கதையை அரசியலுக்கு பயன்படுத்தி,  தலித்துகளுக்கு எதிரான கூட்டமைப்பை கட்டமைத்தவர் மருத்துவர் ராமதாஸ். 2014 தேர்தலில் தருமபுரி விவகாரத்தால் அன்புமணி வெற்றி பெற்றார். 2019ல் தோல்வி அடைந்தார். 2019, 2024ல் பாமக, பாஜகவுடன் தான் கூட்டணியில் இருந்தார்கள்.

குருமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்த வந்த பின்னர் பிரச்சினை சரியாகிவிட்டதாகவே நினைத்தேன். ஆனால் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது, அதிர்ச்சியாக இருந்தது. பாமக வழக்கறிஞர் நீக்கம் என்பது, தன்னுடைய கோபத்தை ராமதாஸ் வெளிப்படுத்துவது ஆகும். என்னை பொருத்தவரை இந்த விவகாரத்தில் அன்புமணி அவசரப்பட்டு விட்டார். ராமதாசுக்கு பின்னர் அந்த கட்சி, அவருக்கு தான் போக போகிறது. அதற்கு எந்த எதிர்ப்பும் இல்லாதபோது அவர் கொஞ்சம் அமைதி காத்து இருக்கலாம். அவர் ராமதாசை குறைத்து மதிப்பிட்டுவிட்டார். ராமதாஸ் போன்றவர்களின் பெரிய குடும்பங்களுக்குள் பிரச்சினைகள் வருகிறபோது, கலைஞரை பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். 2006 முதல் 2011 கால கட்டத்தில் குடும்ப சண்டை உச்சத்தில் இருந்தது. தினகரன் அலுவலகம் எரிப்பு, அழகிரி விவகாரம், கனிமொழி பிரச்சினை, 2ஜி முறைகேடு வழக்கு, ஸ்டாலின் துணை முதல்வராக உயர்த்தப்பட்டது வரை பல்வேறு அதிகார மையங்களை கலைஞர் சிறப்பாக கையாண்டார். அதை ராமதாஸ் போன்றவர்கள் பார்த்து கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

குடும்பங்களுக்குள் பிரச்சினைகள் வருகிறபோது முதிர்ந்த நபர் ஒற்றுமை சக்தியாக இருப்பார்கள். ஆனால் இங்கே முதிர்ந்த தலைவர்தான் பிரச்சினையாக இருக்கிறார். பாமக உடன் கூட்டணி வைப்பது என்றால், அவர்களுக்கு தெரியும் யாரிடம் பேச வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்தார். இது அமித்ஷாவுக்கான அளித்த பதிலாகும். ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே பிரச்சினை வருகிறபோது ஒரு கட்டத்தில் அன்புமணி சுதாரித்து கொண்டிருக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு சாமர்த்தியசாலியாக இருந்தாலும், அவர் உங்களின் அப்பா. நான் சொல்வதை கேட்பதை தவிர வேறு வழியில்லை என்று ராமதாஸ் சொல்கிறார். ஏனென்றால் அவருக்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை. அன்புமணிக்கு இன்னும் 30 வருடம் அரசியல் இருக்கிறது. ஏன் உங்களுக்குள் மோதல்? ஒட்டுமொத்தமாக பார்த்தோம் என்றால் வன்னியர் சமுதாய மக்கள், பாஜக இந்துத்துவா அரசியலுக்கு மாறாமல் இருப்பதற்கு தடைக்கல்லாக ராமதாஸ் திகழ்கிறார். பாமக பலவீனமடைந்து சிதைகிறது என்றால்? வன்னியர் வாக்கு வங்கி மற்றும் வன்னியர் சமுதாயம் ஆகிய இரண்டும் இந்துத்துவா ஆளுமைக்குள் செல்லும் அபாயம் உள்ளது. அது வடதமிழ்நாட்டிற்கு மிகவும் ஆபத்து, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ