சீமான் இனவாதம் என்கிற பெயரில் தமிழர்களை பழங்காலத்திற்கு அழைத்துச் செல்கிறார். தூத்துக்குடியில் உள்ள பிள்ளைகளை கள் இறக்க சொல்லும் அவர், தனது மகனின் படிப்பை நிறுத்திவிட்டு கள் இறக்க சொல்வாரா? என மூத்த பத்திரிகையாளர் உமாபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சீமான் நடத்திய கள் இறக்கும் போராட்டம் மற்றும் அந்த போராட்டத்தின் பின்னணி அரசியல் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி, பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தூத்துக்குடியில் பனைமரம் ஏறி கள் இறக்கியுள்ளார். கள் என்பது ஒரு உணவுப் பொருள் என்றும் சீமான் சொல்கிறார். சீமானின் செயல்பாடுகள் என்பது தமிழர்களை இனரீதியாக கற்காலத்திற்கு கொண்டு செல்வதாகும். பாஜக மத ரீதியாக கொண்டு செல்லும். சீமான், கள் உணவுப் பொருள் என்று சொல்கிறார். அவரது மகனுக்கு கள் இறக்க பழக்குவாரா? உணவுப் பொருள் என்றால் மூன்று வேளையும் கள்ளை சாப்பிட்டு உயிர் வாழ்வாரா? என்று அவருடைய கட்சியினர் சிந்தித்து பார்க்க வேண்டும்.
போதை தருகிற ஒரு பொருளை, உணவுப் பொருள் என்று சீமான் சொல்வது விதண்டாவாதமாகும். பனை மரம் ஏறி, கள் இறக்கி கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்த முடியாது. அதனால்தான் காமராஜர் பள்ளிகளை கட்டி அனைவருக்கும் இலவச கல்வியை வழங்கினார். அண்ணா, கலைஞர் போன்றவர்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்களுக்காக கல்லூரிகள் கட்டி, அவர்களை படிக்க வைத்தனர். முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்வி கட்டணம், இலவச பேருந்து பயணம் என பல்வேறு சலுகைகளை வழங்கி, அவர்களை படிக்க வைத்து முன்னேற்றினார்கள்.
உலகம் முழுவதும் அறிவியல், தொழில்நுட்பத்தில் பல்வேறு புரட்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் மரத்தில் ஏறி கள் இறக்க வேண்டும் என்று சீமான் சொல்கிறார். இது திட்டமிட்ட சதியாகும். சீமான் செய்வது ஆகப் பெரும் கேடு ஆகும். சீமான் ஈசிஆரில் குடியிருப்பார். அவரது மகனை இங்கிலிஷ் மீடியத்தில் படிக்க வைப்பார். ஆனால் தூத்துக்குடியில் இருக்கும் பிள்ளைகள் எல்லாம் கள் இறக்க வேண்டுமா? படிக்கும், வேலைக்கு போகும் நபர்களை கெடுக்கும் வேலையை சீமான் செய்கிறார். இல்லாவிட்டால், சீமான் தூத்துக்குடியில் குடியேறி, நாள்தோறும் தனது மகனுக்கு பனைமரம் ஏறுவதற்கு கற்றுத்தர வேண்டும்.
படித்த இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டுமே தவிர, அவர்களை கள் இறக்க சொல்லக் கூடாது. சீனாவில் கழுதைகளுக்கான தேவை அதிகம் உள்ளதால், பாகிஸ்தானியர் கழுதைப் பண்ணை வைக்க வேண்டும் என்று இம்ரான் கான் ஆலோசனை வழங்கினார். அந்நாட்டு மக்கள் அவரை ஆட்சியில் இருந்தே அகற்றி விட்டார்கள். இந்நிலையில், சீமான் மாடு மேய்க்கும் போராட்டத்தை நடத்துவது எவ்வளவு பிற்போக்கு சிந்தனையாகும். தன்னுடைய பேச்சுத் திறமையால், தமிழர்களை முட்டாள் ஆக்கி அவர்களை குழியில் தள்ளுகிற விஷயம்தான் இது.
தமிழ்நாட்டை தாண்டி எங்கே சென்றாலும் டீயில் பாலே பயன்படுத்த மாட்டார்கள். பாலுக்கான சந்தை என்பது தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் சில மாநிலங்களில் மட்டுமே உள்ளது. இந்தியாவை கடந்து பால் பொருட்களுக்கான வர்த்தகம் என்பதே கிடையாது. கடந்த காலங்களில் மாடு வைத்திருப்பது என்பது ஒரு வீடு செல்வச் செழிப்போடு இருப்பதற்கு அடையாளமாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு எவ்வளவோ வளர்ச்சி ஏற்பட்டுவிட்டது. மாடு வளர்ப்பது நல்லது என்றால் ஈசிஆரில் உள்ள உங்கள் வீட்டில் 10 மாடுகளை வளருங்கள். சீமான் நான்கு வழிச்சாலை வேண்டாம் என்கிறார். ஆனால் அந்த சாலையில் தான் பயணிக்கிறார். வெளிநாட்டு மோகம் வேண்டாம் என்கிறார். ஆனால் வெளிநாட்டு காரில் தான் பயணிக்கிறார்.
அப்போது சீமான் தூத்துக்குடியில் குடியேறிவிட வேண்டியது தானே. அங்கே ஒரு பண்ணையை வைத்து, பையனை படிப்பை நிறுத்திவிட்டு மாடுகளை மேய்க்க சொல்லுங்கள். உங்கள் மனைவி கயல்விழிக்கு பால் கறக்க கற்றுக்கொடுங்கள். அப்படி ஒரு வாழ்க்கையை வாழுங்கள். எல்லோரும் உங்கள் பின்னால் வருகிறோம். நான் தயாராக இருக்கிறேன். சீமான், தூத்துக்குடியில் 10 ஏக்கர் நிலத்தை வாங்கி, சீமான் 50 மாடு, 20 ஆடுகளை வளர்த்து, மனைவி மற்றும் மகனை களத்தில் இறக்கி, மகனுக்கு பனைமரம் ஏறுவதற்கு கற்றுக்கொடுத்தார் என்றால், அடுத்த நிமிடமே அவரது கட்சியில் சேர்ந்து சீமானிடம் சாணி பொறுக்கும் வேலைக்கு செல்கிறேன். நான் ரெடி, நீங்க ரெடியா?
அண்ணாமலை, தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிதான் அமையும் என்று அண்ணாமலை சொல்கிறார். அதிமுக – பாஜக கூட்டணி அதிக இடங்களில் வென்றாலும், பின்னணியில் அமையப் போவது பாஜக ஆட்சிதான். ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி விடமாட்டார். அமித்ஷாவை தேசிய ராஜதந்திரி என்று சொல்வார்கள். அவரை மிஞ்சிய ராஜதந்திரி எடப்பாடி பழனிசாமி. எப்படியும் அமித்ஷாவை காலி செய்துவிடுவார். எடப்பாடியை காலி செய்ய வேண்டும் என்று அமித்ஷா நினைக்கிறார். இவர்கள் இருவரில் ஒருவர் 2026 தேர்தலில் காலியாகி விடுவார்கள். எடப்பாடியை நாம் தான் ஒழிக்க வேண்டும் என்று அண்ணாமலை மிகவும் துடிப்புடன் இருக்கிறார். அந்த வகையில் நான் அண்ணாமலையை ஆதரிக்கிறேன். எப்படியும் அதிமுக – பாஜக கூட்டணியை உடைத்துவிடுவார்.
எடப்பாடிக்கும், நயினாருக்கும் அண்ணாமலை சண்டையை மூட்டி விட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கூட்டணி தானாக உடைந்துவிடும் என்று நினைக்கிறார். 2026 தேர்தலின்போது இந்த பிரச்சினைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிடும். அதிமுக – பாஜக கூட்டணியை எப்படியாவது உடைத்து விடுவது என அண்ணாமலை சபதமேற்று இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எடப்பாடியை அதிமுகவில் இருந்து அனுப்புவதற்கான வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை அறிந்துதான் எடப்பாடி அமைதியாக இருக்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.