1041. இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது
கலைஞர் குறல் விளக்கம் – வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.

1042. இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்
கலைஞர் குறல் விளக்கம் – பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது.
1043. தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குர வென்னும் நசை
கலைஞர் குறல் விளக்கம் – ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்.
1044. இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்
கலைஞர் குறல் விளக்கம் – இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்.
1045. நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்
கலைஞர் குறல் விளக்கம் – வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்.
1046. நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்
கலைஞர் குறல் விளக்கம் – அரிய பல் நூல்களின் கருத்துக்களையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும். அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்.
1047. அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்
கலைஞர் குறல் விளக்கம் – வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை. அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்.
1048. இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு
கலைஞர் குறல் விளக்கம் – கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப் படுத்திய வறுமை. தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்.
1049. நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பா டரிது
கலைஞர் குறல் விளக்கம் – நெருப்புக்குள் படுத்துத் தூங்குவதுகூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்.
1050. துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று
கலைஞர் குறல் விளக்கம் – ஒழுங்குமுறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத் துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு.