1221. மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது
கலைஞர் குறல் விளக்கம் – நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரை குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து!
1222. புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை
கலைஞர் குறல் விளக்கம் – மயங்கும் மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் துன்பப்படுகின்றாயே! எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம் அற்றதோ?

1223. பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும்
கலைஞர் குறல் விளக்கம் – பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது. இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது.
1224. காதலர் இல்வழி மாலை கொலைக்களத்
தேதிலர் போல வரும்
கலைஞர் குறல் விளக்கம் – காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் கனத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது.
1225. காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை
கலைஞர் குறல் விளக்கம் – மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது. அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் ”காலை நேரத்துக்கு நான் செய்த நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன?” என்று புலம்புகிறது.
1226. மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்
கலைஞர் குறல் விளக்கம் – மாலைக்காலம் இப்படியெல்லம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை.
1227. காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்
கலைஞர் குறல் விளக்கம் – காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுவதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்.
1228. அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
சூழல்போலும் கொல்லும் படை
கலைஞர் குறல் விளக்கம் – காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது.
1229. பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து
கலைஞர் குறல் விளக்கம் – என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல எனக்குத் தோன்றுகிறது.
1230. பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயுமென் மாயா உயிர்
கலைஞர் குறல் விளக்கம் – பொருள் ஈட்டுவதற்குச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து பொகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது.



