1171. கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யாங்கண் டது
கலைஞர் குறல் விளக்கம் – கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது? அதே கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்?

1172. தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்ப தெவன்
கலைஞர் குறல் விளக்கம் – விளைவுகளை உணராமல் மயங்கி நோக்கிய மைவிழிகள், இன்று, காதலரைப் பிரிந்ததால் துன்பமுறுவது தம்மால் தான் என அறியாமல் தவிப்பது ஏன்?
1173. கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து
கலைஞர் குறல் விளக்கம் – தாமாகவே பாய்ந்து சென்று அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள்,இன்று தாமாகவே அழுகின்றன. இது நகைக்கத் தக்க ஒன்றாகும்.
1174. பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து
கலைஞர் குறல் விளக்கம் – தப்பிப் பிழைக்க முடியாத தீராத காதல் நோயை எனக்குத் தருவதற்குக் காரணமான என் கண்கள், தாமும் அழ முடியாமல் வற்றிப் போய்விட்டன.
1175. படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தவென் கண்
கலைஞர் குறல் விளக்கம் – கடல் கொள்ளாத அளவுக்குக் காதல் நோய் உருவாகக் காரணமாக இருந்த என் கண்கள், இப்போது தூங்க முடியாமல் துன்பத்தால் வாடுகின்றன.
1176. ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது
கலைஞர் குறல் விளக்கம் – ஓ என் காதல் நோய்க்குக் காரணமான கண்கள், என்னைப் போலவே வாடி வருந்துகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே!
1177. உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்
கலைஞர் குறல் விளக்கம் – அன்று, இழைந்து குழைந்து ஆசையுடன் அவரைக் கண்ட கண்களே! இன்று பிரிந்து சென்றுள்ள அவரை நினைத்துத் தூங்காமலும், துளிக் கண்ணீரும் அற்றுப் போகும் நிலையிலும் துன்பப்படுங்கள்.
1178. பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணா தமைவில கண்
கலைஞர் குறல் விளக்கம் – என்னை அரவணைக்கும் எண்ணமின்றிக் காதலித்த ஒருவர் இருக்கின்றார். அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே!
1179. வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்
கலைஞர் குறல் விளக்கம் – இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்து விட்டாலும் பிறகு தூங்குவதில்லை இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவை காதலர்களின் கண்களாகத் தானே இருக்க முடியும்.
1180. மறைபெறல் ஊரார்க் கரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து
கலைஞர் குறல் விளக்கம் – காதல் வேதனையைப் பறைசாற்றிக் காட்டிக் கொடுக்க எம் கண்களேயிருக்கும்போது; யாம் மறைப்பதை அறிந்து கொள்வது ஊரார்க்குக் கடினமல்ல.