மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மீது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது வலைத்தளப் பக்கத்தில் அவா் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
“நாடாளுமன்றத்தில் மக்களின் குரலை பிரதிபலிக்கும் வகையில் தொடர்ந்து போராடி வருகிற ஒருவரை மிரட்டுவது, ஜனநாயகத்தையே தாக்கும் செயல் ஆகும். இத்தகைய மிரட்டல்கள் சட்ட ஒழுங்கை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அரசியல் கருத்து வேறுபாடுகளை ஜனநாயக ரீதியில் தீர்க்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கைக்கும் விரோதமாகும். தகவல், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மிரட்டல் விடுத்தவர்களை உடனடியாக கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பாதுகாப்பாக தங்கள் பணிகளைச் செய்ய ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “மதுரை மக்களின் பேராதரவோடு இரண்டாவது முறையாக பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தோழர் சு.வெங்கடேசன் அவர்கள் சிறந்த முறையில் மக்கள் சேவை செய்து வருபவர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் மக்களை பாதிக்கும் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருபவர். அவர் இந்துத்துவா சக்திகளின் வகுப்புவாத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி உறுதியான முறையில் பாராளுமன்றத்திற்குள்ளும், மக்கள் மத்தியிலும் எதிர்ப்பை பதிவு செய்து வருவதை நாடறியும். 28.7.2025 அன்று பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு ஒன்றிய பிஜேபி அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தியுள்ளார். அன்று இரவு யாரோ ஒருவன் சு.வெங்கடேசன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு “நீ எப்படி பிரதமர் மோடியை விமர்சித்து பேசலாம்? நீ தமிழ்நாட்டுக்குள் உயிரோடு வர முடியாது. நீ தமிழ்நாட்டுக்கு வந்தால் உன்னை நானே கொலை செய்வேன்”என்று கொலை மிரட்டல் விடுத்ததுடன் அசிங்கமான வார்த்தைகளால் திட்டியுள்ளான். சமூக விரோதியின் இந்த கொலை மிரட்டலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
இந்த கொலை மிரட்டல் தொடர்பாக நேற்று இரவே (28.7.2025) தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அவர்களுக்கு இணையம் மூலம் தோழர் சு.வெங்கடேசன் புகார் அனுப்பியுள்ளார். இந்த புகாரை ஏற்றுக் கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரை சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுக்கும் வகையில் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டுமென்றும், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தலைவா் பெ. சண்முகம் தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்தியுள்ளாா்.
மேலும், நாடாளுமன்ற அவைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதற்காக அவர் மீது கொலை மிரட்டல் விடுப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும். இந்த ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் தங்களது வலுவான கண்டனக் குரலை எழுப்புமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சிமதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. தொலைபேசியில் அவ்வாறு மிரட்டல் விடுத்தது யார் எனக் கண்டறிந்து அந்த நபர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவிக்குமார் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளாா்.