தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்திக் சுப்பராஜ். இவர் ‘பீட்சா’ படத்தின் மூலம் அறிமுகமாகி ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இருப்பினும் கடந்த மே மாதம் இவருடைய இயக்கத்தில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதைத் தொடர்ந்து இவர் புதுமுக நடிகர்களை வைத்து படம் எடுக்கப் போகிறார் என்று பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் ‘ரெட்ரோ’ படத்தை முடித்த பிறகு ரஜினியுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற விரும்பினாராம். அதன்படி அவரிடம் அந்த கதையை சொல்ல முயற்சித்த போது அது நடக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் தான் புதுமுக நடிகர்களை வைத்து படம் எடுக்க முடிவு செய்தாராம் கார்த்திக் சுப்பராஜ். எனவே இந்த படத்தை முடிப்பதற்குள் ரஜினி, கார்த்திக் சுப்பராஜை அழைத்து புதிய படத்தின் கதையை கேட்டால் மீண்டும் ‘பேட்ட’ பட கூட்டணி இணைய வாய்ப்பிருக்கிறது என்றும் அப்படி அது நடக்கவில்லை என்றால் ரஜினிக்காக எழுதப்பட்ட கதையில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க கார்த்திக் சுப்பராஜ் திட்டமிட்டு வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இனிவரும் நாட்களில் இந்த புதிய படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
ரஜினி தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப்போவதாகவும், கமலுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கப்போவதாகவும் சமூக வலைதளங்களில் பேச்சு அடிபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


