எடப்பாடி பழனிசாமி தன்னை கிளை செயலாளர் ஆக்கிய செங்கோட்டையன் முதல் முதலமைச்சர் ஆக்கிய சசிகலா வரை எல்லோரையும் காலி செய்துவிட்டார் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் குற்றம்சாட்டியுள்ளார்.


செங்கோட்டையன் நீக்கம் குறித்து அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- எடப்பாடி பழனிசாமியின் முதல் அரசியல் வழிகாட்டியே செங்கோட்டையன்தான். அவரை சிலுவையம் பாளையம் கிளை செயலாளராக நியமித்தவரே செங்கோட்டையன் தான். உறவினர் தொடர்புடைய சொத்துப்பிரச்சினையில் கொலை வழக்கில் சிக்கி, தற்பாதுகாப்புக்காக தஞ்சமடைந்ததில் இருந்து தான் அவருடைய அரசியல் வரலாறே தொடங்குகிறது. முதலமைச்சராக செங்கோட்டையன்தான் நிற்க வேண்டும் என்கிற பரிசீலனை வந்தபோது, தன்னால் ஏலத்தில் அவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாது என்று சொல்லிவிட்டார். அந்த ஏலத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுவிட்டார்.
தன்னை கிளைச் செயலாளர் ஆக்கியவர் முதல் முதலமைச்சர் ஆக்கியவர் வரை எல்லோரையும் எடப்பாடி பழனிசாமி காலி செய்துவிட்டார். எம்ஜிஆர் மறைவின்போது அதிமுக அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டுதான் மேலே வந்தது. அதேபோல் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் பாதாளத்திற்கு சென்ற அதிமுக இன்னும் மேலே வரவே இல்லை. அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று ஒரு குரல் கேட்கும்போது எல்லாம் அதிமுகவில் இன்னொரு அணி உருவாகிறது. தற்போது செங்கோட்டையன் தலைமையில் புதிய அணி ஒன்று உருவாகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதே கொடநாடு பங்களாவில் இருந்த ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் என எல்லாவற்றையும் கைப்பற்றி விட்டார். இதன் மூலமாக சசிகலா சாம்ராஜ்யத்தையே எடப்பாடி இல்லாமல் செய்துவிட்டார். எடப்பாடிக்கு நம்மால் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என்று தெரியும். எனவே கட்சியை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். எதிர்வரும் தேர்தலில் அதிமுக வீழ்ச்சி அடைந்தாலும் கணிசமான இடங்களை வெல்வார்கள். எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக தோல்விகளை சந்திப்பதாக செங்கோட்டையன் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக என்பது தனிநபர் தலைமையை வைத்து அரசியல் செய்கிற இயக்கமாகும். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களின் வசீகரத்தை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள் அவர்கள். பிம்ப அரசியலை தான் அவர்கள் கட்டமைத்தார்கள். அரசியலுக்கு வர அறிவாற்றால், தியாகம், உழைப்பு போன்றவை எல்லாம் தேவை இல்லை. சினிமாவில் அறியப்பட்ட முகமாக இருந்தாலே போதும் முன்னுக்கு வந்துவிடலாம் என்கிற மூட நம்பிக்கைக்கு வித்திட்டது அதிமுக தான். அதிமுகவின் விளைவுதான் கரூர் துயர சம்பவம் வரை நாம் பார்த்ததாகும்.

எடப்பாடி பழனிசாமியால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட தினகரனுக்கு, டெல்டா மாவட்டங்களில் கணிசமான வாக்குகள் உள்ளன. ஓபிஎஸ் ஒன்றுமில்லாதவர் என்று சொன்னார்கள். ஆனால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்ட ஒபிஎஸ் 3.5 லட்சம் வாக்குகளை பெற்று, அதிமுகவை 3வது இடத்திற்கு தள்ளினார். அத்துடன் எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. அதிமுகவில் இருந்து நாளை யார் வேண்டுமானாலும் முதலமைச்சராக வருவார்கள் என்று அமித்ஷா செல்வதன் மூலமாக, அந்த கட்சியில் இருந்துதான் முதல்வர் வருவார்களா? அல்லது நிர்மலா சீதாராமனை போன்ற யாரையாவது முதல்வராக கொண்டுவந்து விடுவார்களா? என்கிற மூத்த தலைவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். எ
னவே செங்கோட்டையனை நீக்குவதன் மூலம் எடப்பாடி பழனிசாமி மேலும் பலவீனமடைவார். ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் மட்டும்தான் கட்சி இருப்பது போன்ற தோற்றம் இருக்கிறது. தற்போது அங்கும் பலவீனப்படுவார். தேவர் குருபூஜைக்கு சென்றதற்காக செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியதால், முக்குலத்தோர் சமுதாய மக்களிடம் அவர் மீதான கோபம் மேலும் அதிகரிக்கும். ஏற்கனவே அதிமுக கொங்கு மண்டல கட்சியாக மாறிவிட்டது.

தென்மாவட்டங்களை சேர்ந்த உதயகுமார், செல்லூர் ராஜு போன்றவர்களுக்கு எடப்பாடி முக்கியத்துவம் கொடுக்கிறார். ஆனால் அந்த சமுதாயத்தின் அடையாளமாக நீண்ட காலமாக இருந்தவர் சசிகலா. மூன்று முறை இடைக்கால முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் இடத்தை, உதயகுமார், ராஜன்செல்லப்பா எப்படி நிரப்ப முடியும்? அந்த சமுதாயத்தில் பிறந்ததாலேயே அவர்கள் சமுதாய தலைவர்கள் ஆகிவிட முடியாது. எனவே அதிமுக மேலும் மேலும் பலவீனமடைந்து வருகிறது. அவர்களின் தோள் மீது ஏறிக்கொண்டு பாஜக வளர பார்க்கிறது.
கண் முன்னே நடைபெற்று கொண்டிருக்கும் அதிமுகவின் அழிவை தடுப்பதற்கு பதிலாக இருவரும் சண்டை போட்டு கொண்டிருக்கிறார்கள். இது பாஜகவுக்கான வாசலை திறப்பதை தவிர வேறு வாய்ப்பே கிடையாது. டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்றவர்கள், தங்களுக்கு எடப்பாடி தான் எதிரி என்று சொல்கிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தல் வரை எடப்பாடி தான் பொதுச்செயலாளர். ஒருவேளை தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வி சந்தித்தால் மட்டுமே எடப்பாடி பழனிசாமி மாற்றப்படுவார். அதுவரை அவரை அசைக்கவே முடியாது. காரணம் கட்சி அவரிடம்தான் உள்ளது. இரட்டை இலை சின்னம் அவரிடம் தான் உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


