விஜயை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விமர்சிக்க தொடங்கி இருக்கும் நிலையில், சேலம் மாநாட்டிற்கு பிறகு தாக்குதல் தீவிரமடையும் என்று பத்திரிகையாளர் புன்னை வளவன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் புன்னை வளவன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- மெர்சல் திரைப்படம் வெளியாவதற்கு நாங்கள் தான் உதவி செய்தோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜயுடன் எடுத்த போட்டோ, வீடியோக்களை எல்லாம் எடுத்து காட்டுகிற நிலைக்கு போய்விட்டார். காரணம் அன்றைக்கு சம்பம் நடைபெற்றபோது, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருந்தவர் அவர்தான். நேரடியாக இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளவர் அவர்தான்.
2017 தீபாவளி பண்டிகைக்கு மெர்சல் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் படத்திற்கு விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் வாங்க மறந்தது படம் வெளியாவதற்கு 4 நாட்களுக்கு முன்பு தான் தெரியவந்தது. இதனால் முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. அவர் அமைச்சரை சந்திக்க அறிவுறுத்தினார். இதனால் அன்றைய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து, தன்னுடைய படத்தை வெளியிட 3 மணி நேரம் விஜய் காத்திருந்தார்.

இது குறித்து அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது அவர், தொழில் செய்கிறார்கள். செய்து கொடுத்துவிடலாம். சான்றிதழ் விவகாரத்தை கவனிக்காமல் விட்டுவிட்டனர் போல, என்று சொன்னார். அதன் பேரில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஐஏஎஸ் அதிகாரிகளை அவசரமாக வரச்சொல்லி, விஜய் தரப்பை டெல்லியில் தொடர்புகொள்ள செய்து, இரு தரப்பையும் ஒருங்கிணைத்து விலங்குகள் நல வாரிய அதிகாரிகளை திங்கட்கிழமை சென்னையில் கூடும்படி ஒப்புக்கொள்ள வைத்தனர். அதன்பிறகு விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் சென்னையில் கூடி மெர்சல் படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கினர். அதனால் சொன்னபடி செவ்வாய்க்கிழமை படத்தை வெளியிட்டனர்.
இதை எடப்பாடி பழனிசாமி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்தார். இதற்காக நன்றி தெரிவித்து ஒரு பக்க விளம்பரம் விஜய் வெளியிட்டார். இதை செய்து கொடுத்ததற்காக வாழ்நாள் முழுக்க நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று விஜய் தெரிவித்தார். ஆனால் இன்றைக்கு அதிமுக என்கிற பெயரே அவருடைய வாயில் வரவில்லை என்று சொல்கிறார்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக மற்றொரு முன்னாள் அதிமுக அமைச்சர், சர்கார் படத்தை ஒரே ஷோவுடன் மதுரையில் நிறுத்தியது மறந்துவிட்டதா? என கேட்டருந்தார். சர்கார் படத்தில் ஜெயலலிதா புகைப்படத்தை ஒட்டிய லேப்டாப்களை உடைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததால், அதனை மதுரையில் அதிமுகவினர் நிறுத்தினார்கள். மற்றொரு முறை ஜிஎஸ்டி தொடர்பாக விஜய் பேசியது சர்ச்சையானது. ஹெச்.ராஜா ஜோசப் விஜய் என்று ஆதார் கார்டை வெளியிட்டார். இவ்வளவு சம்பவங்களின் போதும் அதிமுக துணை நின்றதாக சொல்கிறார்கள்.
மேலும், நாங்கள் அம்மா செய்தது போன்று உங்களுக்கு செய்தோமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். தலைவா திரைப்பட வெளியீட்டின்போது கோடநாடு பங்களா வாசலில் பள்ளி மாணவர் போன்று நிற்க வைத்தார்கள். அதுபோன்று நாங்கள் செய்தோமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதிமுகவை பொறுத்தவரை திரைத்துறையில் அவர்கள் எந்த தலையீடும் செய்வதில்லை. இப்படி எதையும் தாங்கள் செய்யாதபோது நீங்கள் குறைந்தபட்சம் நாகரிகத்தோடு நடந்து கொண்டிருக்கக் கூடாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

தன்னுடைய வழிகாட்டியாக ஜெயலலிதாவை கூறும் விஜய், அதிமுகவை ஊழல் கட்சி என்று சொல்வது சரியானதா என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார். அவர் தெளிவாக தான் உள்ளாரா? என்றும் கேட்டுள்ளார். தவெக வலிமையாக உள்ள தூத்துக்குடியில் அக்கட்சியினர் அதிமுகவில் இணைந்துள்ளது விஜயை நேரடியாக அடிக்க தொடங்கிவிட்டனர் என்று தான் தோன்றுகிறது. என்னை பொருத்தவரை அதிமுக இன்னும் அடிக்க தொடங்கவில்லை. அவர்கள் வார்ம்அப்பில் தான் உள்ளனர். கடம்பூர் ராஜுவின் பேச்சு என்பது ஒரு ட்ரைலர்தான். இதற்கு மேல் விஜய் மீதான தாக்குதல் அதிகரிக்கும். காரணம் பிப்ரவரி 13ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு விஜய் செல்கிறார். ஆனால் மக்கள் சந்திப்புக்கு அனுமதி வழங்கவில்லை. 5000 நிர்வாகிகளை அழைத்து கூட்டத்தை நடத்துகிறார்கள்.
மக்கள் சந்திப்புக்கு அனுமதி கொடுக்காவிட்டால் நீதிமன்றத்தற்கு சென்று இருக்கலாம். ஆனால் அவர்கள் செல்லவில்லை. அப்படி சென்று இருந்தால் திமுகவை அம்பலப்படுத்தி இருக்கலாம். ஆனால் அதுவும் செய்யவில்லை என்றால் விஜயின் அரசியல் திட்டம் தான் என்ன இருக்கிறது? என்கிற கேள்வி எழுகிறது. இதைவிட்டால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு, தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற வேண்டும். 45 நாட்களில் உங்களால் எல்லா இடங்களிலும் பிரச்சினை செய்ய முடியாது. விஜய் எடப்பாடியாரின் மாவட்டத்திற்கே செல்கிறாரா? என்று அதிமுக அடிக்கத் தொடங்கும். அதன் கூட்டணி கட்சிகளும் ஆதரவுக்கு வரும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


