தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளதை முன்னிட்டு, அன்றைய தினம் மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் வெளியிட்டுள்ள இந்த அரசாணையில் (G.O.Ms.No.239, நாள்: 26.03.2026), இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, பொதுமக்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை தடையின்றி ஆற்றுவதற்காக, 1881-ஆம் ஆண்டு ‘மாற்றுச் சீட்டு சட்டத்தின்’ (Negotiable Instruments Act, 1881) கீழ் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த அறிவிப்பின்படி, வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி அன்று:
தமிழக அரசு அலுவலகங்கள்.
அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள்.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்.
கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வணிக வங்கிகள்.
தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர்கள் எவ்வித சிரமமுமின்றி வாக்களிக்க ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழக அரசிதழிலும் (Gazette) வெளியிடப்பட உள்ளது.
