நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் சுவர்ணலதா ராய் வயது மூப்பு காரணமாக காலமானார். அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூரில் பிறந்தவரான பிரகாஷ்ராஜ் கன்னட தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் நடித்து வந்தார். அப்போது தான் இயக்குநர் கே.பாலசந்தர் பிரகாஷ்ராஜை தன்னுடைய ‘டூயட்’ படத்தின் நடிக்க வைத்து தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார் நடிகா் பிரகாஷ்ராஜ்.
பிரகாஷ் ராஜின் நடிப்பை கொண்டாட எத்தனையே திரைப்படங்கள் இருப்பினும், மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘இருவர்’ படத்தில் கலைஞர் மு.கருணாநிதியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ்ச்செல்வன் கதாபாத்திரத்தில் நயம்பட நடித்து புகழ்பெற்றாா். ‘இருவர்’ படத்தில் நடித்ததற்காகச் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார்.

இந்நிலையில் பிரகாஷ் ராஜின் தாய் சுவர்ணலதா பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்ததை பிரகாஷ் ராஜ் பலமுறை பொதுவெளியில் பேசியுள்ளார். இவரது தாய் சுவர்ணலதா ராய் (86) நேற்றிரவு ஹைதராபாத்தில் வயது மூப்பின் காரணமாக காலமானார். அவரின் இறுதிச்சடங்குகள் செவ்வாய்க்கிழமை நாளை மார்ச் 31-ஆம் தேதி பெங்களூரில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. பிரகாஷ் ராஜின் தாய் சுவர்ணலதாவின் மறைவிற்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
