உலக நாடுகள் அணு ஆயுதங்களை நம்புவதையும், அவற்றின் உற்பத்தி மற்றும் நவீனமயமாக்கலை அதிகரிப்பதையும் தீவிரப்படுத்தி வருவதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதிக்கான ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) தனது 2026-ஆம் ஆண்டுக்கான புதிய அறிக்கையில் எச்சரித்துள்ளது. பல தசாப்தங்களாக உலகளவில் முன்னெடுக்கப்பட்ட அணு ஆயுதக் குறைப்பு முயற்சிகள் தற்போது பின்னடைவை சந்தித்து வருவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
உலகளவில் தற்போது சுமார் 12,200 அணு ஆயுதங்கள் இருப்பதாக SIPRI தெரிவித்துள்ளது. பழைய அணு ஆயுதங்களை அகற்றும் வேகம் குறைந்து வரும் நிலையில், புதிய ஆயுதங்களை உருவாக்கி நிலைநிறுத்தும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. உலக நாடுகளின் பாதுகாப்பு கொள்கைகளில் அணு ஆயுதங்கள் மீண்டும் முக்கிய இடத்தைப் பெறத் தொடங்கியுள்ளன.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட ஒன்பது அணுசக்தி நாடுகளும் தங்களது அணு ஆயுதக் களஞ்சியங்களை தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றன. குறிப்பாக, உலகின் மிகப்பெரிய அணு ஆயுத சக்திகளான ரஷ்யா மற்றும் அமெரிக்கா முறையே 5,420 மற்றும் 5,042 அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளன. இந்த இரு நாடுகளிலும் தலா 2,100-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் உடனடி பயன்பாட்டுக்கான உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.
சீனா உலகிலேயே மிக வேகமாக தனது அணு ஆயுதத் திறனை விரிவுபடுத்தி வரும் நாடாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டில் 600 ஆக இருந்த சீனாவின் அணு ஆயுத இருப்பு, 2026-ஆம் ஆண்டில் 620 ஆக உயர்ந்துள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கான புதிய ஏவுதளங்களை அமைத்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இணையான அணு திறனை நோக்கி சீனா நகர்ந்து வருவதாக SIPRI தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அணு ஆயுத எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட உயர்ந்துள்ளது. 2025-ஆம் ஆண்டில் 180 ஆக இருந்த அணு ஆயுத இருப்பு, தற்போது 190 ஆக அதிகரித்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. அதேசமயம், அண்டை நாடான பாகிஸ்தான் தனது அணு ஆயுத எண்ணிக்கையை 180 என்ற நிலையிலேயே தக்க வைத்துள்ளது.
வட கொரியாவின் அணு ஆயுத இருப்பும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டில் 50 ஆக இருந்த அதன் அணு ஆயுத எண்ணிக்கை தற்போது 60 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் பாதுகாப்பு தொடர்பான அச்சங்களை மேலும் அதிகரித்துள்ளது. மேலும், உலக நாடுகள் பலவும் போர் அல்லாத காலங்களில்கூட அணு ஆயுதங்களை ஏவுகணைகளில் பொருத்தி தயார் நிலையில் வைத்திருக்கும் புதிய நடைமுறையை பின்பற்றத் தொடங்கியுள்ளன. இது எதிர்காலத்தில் அணு ஆயுதப் பயன்பாட்டின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என SIPRI வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
பரவி வரும் பிராந்திய மோதல்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் உலகளாவிய அரசியல் பதற்றங்கள் காரணமாக, அணு ஆயுதங்கள் மீதான நாடுகளின் சார்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இது உலக அமைதிக்கு புதிய சவால்களை உருவாக்குவதாகவும் SIPRI தனது அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.
மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறும் AI: உலகளாவிய தடையை கோருகிறது ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனம்!
