இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்குப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் (BCM) சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதற்கு எதிராகத் தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சார்பில் மதுரையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 2024-ஆம் ஆண்டு தமிழக அரசு ஒரு முக்கிய அரசாணையை வெளியிட்டிருந்தது. அதன்படி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC), சீர்மரபினர் (DNC) அல்லது பட்டியலினத்தவர் (SC) ஆகிய பிரிவுகளில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறும் ஒருவர், இடஒதுக்கீடு பலன்களைப் பெறுவதற்காகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிமாக (BCM) கருதப்படலாம் என்றும்; அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஏழு பிரிவுகளில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவராகக் குறிப்பிட்டு சாதிச் சான்றிதழ் வழங்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த அரசாணையின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சமீர் என்பவர் தனக்குப் பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் சான்றிதழ் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, “இஸ்லாமிற்கு மதம் மாறிய ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் என்ற தகுதியைக் கோர முடியாது என கருதுகிறோம். அவர் ஒரு முஸ்லிம் மட்டுமே. இஸ்லாமுக்கு மதம் மாறிய ஒருவருக்கு, பிறப்பின் அடிப்படையில் வழங்கப்படும் ‘முஸ்லிம் லெப்பை’ உள்ளிட்ட குறிப்பிட்ட முஸ்லிம் சமூகப் பெயர்களுடன் சான்றிதழ் வழங்க இயலாது” என உத்தரவிட்டது.

நீதிபதிகளின் இந்த உத்தரவு மதம் மாறிய இஸ்லாமியர்களின் இடஒதுக்கீடு உரிமையைப் பறிக்கும் வகையில் உள்ளதாகப் பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, இன்று மதுரை கிரைம் பிராஞ்ச் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு, நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவும், சமூக நீதியைக் காக்கத் தமிழக அரசு உடனடியாக இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
முதலமைச்சர் தலைமையில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாநாடு: மாவட்ட வாரியாக திட்டங்கள் ஆய்வு
