தி கேரளா ஸ்டோரி ரிலீஸ்- போலீஸ் பலத்த பாதுகாப்பு
தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஒளிபரப்பப்படும் திரையரங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்துள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாகவும், இதன் காரணமாக 32 ஆயிரம் பெண்கள் மாயமாகி உள்ளதாகவும் கூறப்படும் கதைக் களத்தில் தி கேரளா ஸ்டோரி எனும் திரைப்படம், தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இன்று வெளியாகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலம் முழுதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய சார்ந்த நிர்வாகிகள் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.
விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. அதில் 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குக் கடத்தப்படுவதாக ஹிஜாப் அணிந்த ஒரு பெண் பேசுவது போல் காட்சிகள் இடம்பெற்றது. மத வெறுப்பை தூண்டும் வகையில் படம் இருப்பதாக பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
கோவை, ஈரோடு, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்படமானது இன்று வெளியாக உள்ள நிலையில், தலைநகர் சென்னையில் 10 இடங்களில் இந்த திரைப்படம் வெளியிடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை தியாகராய நகரில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் இப்படம் ஆனது வெளியிடப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார. அதன்படி தற்போது இந்த திரையரங்குக்கு வரும் பொதுமக்களை சோதனைக்கு பிறகு திரையரங்குக்குள் அனுமதிக்கின்றனர். அதேபோல படம் பார்க்க வரும் நபர்களின் விவரங்கள் மற்றும் முகவரிகளை சேகரித்த பின்பு உள்ளே அனுமதிக்கின்றனர. சர்ச்சைக்குள்ளான கேரளா ஸ்டோரி திரைப்படம் இன்று வெளியாக உள்ள நிலையில், சென்னையில் ஆங்காங்கே இருக்கக்கூடிய திரையரங்கில் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.