“சட்டமன்ற உறுப்பினராக (எம்.எல்.ஏ) வெற்றி பெற்ற வேகத்திலேயே பல பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்கிறார்கள். எம்.எல்.ஏ-ஆகி என்ன பண்ண போறீங்க என்று கேட்டால் ராஜினாமா பண்ண போறோம் என்கிறார்கள். இவர்களைத் தேர்ந்தெடுத்த மக்கள் முட்டாளா அல்லது இவரா? என்று தெரியவில்லை” என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் தேர்தல் அரசியலை கடுமையாக சாடிப் பேசினார்.


ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கலை இரவு மற்றும் மறைந்த திரை ஆளுமைகள் பாரதிராஜா, கே. பாக்கியராஜ், நாட்டுப்புறக் கலைஞர் முரசு ஆனந்த், வானம்பாடி கவிஞர் புவியரசு மற்றும் சுற்றுச்சூழல் போராளி மருத்துவர் சத்தியசுந்தரி ஆகியோரின் நினைவு அரங்கக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார். அவரது நகைச்சுவையான மற்றும் அரசியல் விமர்சனம் நிறைந்த உரையின் முக்கிய விவரங்கள் வருமாறு:
மௌன ராகம் பாணி அரசியல்!
திரைப்பட இயக்குநர் மணிரத்தினத்தின் ‘மௌன ராகம்’ திரைப்படத்தை மேற்கோள் காட்டி பேசிய மதுக்கூர் ராமலிங்கம், “சமீபத்தில் முகநூலில் டாக்டர் ராமானுஜம் என்பவர் ஒரு பதிவிட்டிருந்தார். மௌன ராகம் படத்தில் திருமணமான மறுநாளே கணவனிடம் மனைவி டைவர்ஸ் (விவாகரத்து) கேட்பார். அதேபோல, இன்றைக்குத் தேர்தல் அரசியலில் எம்.எல்.ஏ-வாக ஜெயிச்ச உடனேயே ‘என்ன பண்ண போறீங்க?’ என்று கேட்டால், ‘ராஜினாமா பண்ண போறோம்’ என்று சொல்கிறார்கள். விளம்பரத்திற்காகவும், சுயநலத்திற்காகவும், இடைத்தேர்தல் மூலம் வரும் ஆதாயத்திற்காகவும் இப்படிப் பதவிகளைத் தூக்கி எறிந்துவிட்டு, மீண்டும் அவரே தேர்தலில் நிற்பாராம்; அதற்கு மக்கள் மீண்டும் ஓட்டுப் போட வேண்டுமா? இவர்களைத் தேர்ந்தெடுத்த நாம்தான் முட்டாள்களா? இதனால் ஒட்டுமொத்த ஜனநாயகமே பெரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறது” என்று விமர்சித்தார்.
சிவராத்திரி ஆட்டத்திற்கு ஒரு நீதி… மக்கள் கலைக்கு ஒரு நீதியா?
தமிழகத்தில் இரவு நேர கலை நிகழ்ச்சிகளுக்குக் காவல் துறை விதிக்கும் கட்டுப்பாடுகள் குறித்து அவர் பேசுகையில், “இரவு 10 மணிக்கு மேல் பொதுவெளியில் பேசக்கூடாது, ஆடக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள். ஆனால், ஒரு சாமியார் மட்டும் சிவராத்திரி அன்று விடிய விடிய ஆடுகிறார். அதற்கு எந்தக் கணக்கு வழக்கும் இல்லை; அவரது ஆட்டத்தைப் பார்க்க ஜனாதிபதி முதல் பெரிய மனிதர்கள் வரை வருகிறார்கள். அவர் ஆடுவதை விட எங்கள் கலைஞர்கள் ஆடும் பறையாட்டமும், சாட்டைக்குச்சி ஆட்டமும் மிகச் சிறப்பானது. கூத்து பார்த்து வளர்ந்த மரபு நம்முடையது. எனவே, இத்தகைய மக்கள் கலை இரவுகளை எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி விடிய விடிய நடத்துவதற்குத் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்” என்றார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு தமுஎகச செய்த பெருமை
மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் படைப்புகள் குறித்துப் பேசிய அவர், “தமிழ்த்திரைப்பட வரலாற்றில் செட் போட்டுப் படம் எடுத்த முறையை மாற்றி, இயற்கையான மண்வாசனையோடு படங்களை எடுத்தவர் பாரதிராஜா. திண்டுக்கல்லில் தமுஎகச சார்பில் அவரது படைப்புகள் குறித்து மூன்று நாட்கள் பிரம்மாண்டமான ஆய்வரங்கம் நடத்தப்பட்டது. ஒரு திரைப்பட இயக்குநரின் படைப்புக்காக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடிப் பாராட்டிய நிகழ்வு தமிழக வரலாற்றிலேயே அது ஒன்றுதான்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மேலும், இயக்குநர் கே. பாக்கியராஜின் திரைக்கதை உத்திகளையும், அவரது ‘இது நம்ம ஆளு Helsinki’, ‘ஞானப்பழம்’ போன்ற படங்களில் இருந்த சாதிய எதிர்ப்பு மற்றும் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான கருத்துகளையும் அவர் நினைவுகூர்ந்தார்.
அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கப் போராடுவோம்
இறுதியாக, “அண்ணல் பாபாசாகேப் அம்பேத்கர் நமக்கு இயற்றித் தந்த அரசியல் சாசனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள கருத்துரிமை, பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமையைப் பாதுகாப்பதற்காகத் தமுஎகச தொடர்ந்து போராடி வருகிறது. நாட்டில் மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மாநில உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்; அப்போதுதான் ஜனநாயகம் தழைக்கும்” என்று கூறித் தனது உரையை நிறைவு செய்தார் மதுக்கூர் ராமலிங்கம்.
