“நீட் தேர்வு என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப்படுத்திய காங்கிரஸ் கட்சி, இன்று அதை எதிர்த்துப் போராடுவது ஒரு அரசியல் கேலிக்கூத்து” என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


காங்கிரஸின் அரசியல் கேலிக்கூத்து:
கடந்த 2010-ஆம் ஆண்டு மத்திய ஆட்சியில் இருந்தபோது, மருத்துவப் படிப்புகளுக்காக தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு என்ற கருத்தை உருவாக்கி, ‘நீட்’ தேர்வுக்கு அடித்தளமிட்டதே காங்கிரஸ் கட்சிதான். ஆனால், இன்று அதே நீட் தேர்வுக்கு எதிராகத் தெருக்களில் இறங்கி அவர்கள் போராடுவது, மாணவ-மாணவிகளின் உணர்வுகளை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தும் கீழ்த்தரமான செயலாகும்.
அன்று நீட் தேர்வை அறிமுகப்படுத்த முயன்றது தவறு என்பதை காங்கிரஸ் ஒப்புக்கொள்கிறதா? அல்லது அன்று எடுத்த முடிவு சரி என்றால், இப்போது நடத்தும் போராட்டங்கள் வெறும் அரசியல் சுயலாபத்திற்காகவா? என்பதை நாட்டு மக்களுக்கு அவர்கள் முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.
தவெக அரசின் இரட்டை நிலைப்பாடு:
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகச் சாலைகளில் இறங்கிப் போராடிய மாணவர்கள் மீது காவல்துறையை ஏவி, அவர்களை வலுக்கட்டாயமாகத் தமிழக அரசு கைது செய்தது. “பொதுமக்களுக்குச் சிரமம் தரக் கூடாது; முன்அனுமதி பெற்று அமைதியாகப் போராட வேண்டும்” என்று அதிகாரத் தொனியில் பேசும் தவெக அரசு, டெல்லியில் பிரதமரின் இல்லம் முன்பாக எவ்வித அனுமதியும் இன்றி சாலையில் போராட்டம் நடத்திய ராகுல் காந்தியைக் கைது செய்ததை ‘ஜனநாயகப் படுகொலை’ என்று கூறுவது முரண்பாடாக இல்லையா?
தனது கடந்தகாலத் தவறுகளையும் முடிவுகளையும் மூடிமறைத்து, மாணவர்களின் எதிர்கால நலன் எனும் முகமூடியை அணிந்துகொண்டு காங்கிரஸ் நடத்தும் இந்தப் போராட்டம், மாணவர்களைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே தவிர வேறில்லை என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி: கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி ஜூலை 27-ல் விசிக ஆர்ப்பாட்டம்!
