“ஆந்திர மாநிலத்தில், தன் சிறுமி மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற காதலனின் அந்தரங்க உறுப்பைக் தாய் கத்தியால் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.”
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் ரச்சனபள்ளிப் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற ஆட்டோ ஓட்டுநர், அப்பகுதியில் உள்ள பெண் ஒருவருடன் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்துவந்துள்ளார். இந்நிலையில், அப்பெண்ணின் சிறுமியான மகள் மீதும் சுரேஷ் பாலியல் நோக்குடன் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அச்சிறுமி தனது தாயிடம் பலமுறை புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, தன் மகளிடம் தவறாக நடந்து கொள்ள வேண்டாம் என சுரேஷை அப்பெண் பலமுறை கடுமையாக எச்சரித்தும் அவர் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
நள்ளிரவில் அரங்கேறிய அத்துமீறல்
இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று நள்ளிரவில் சுரேஷ் அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது கழிவறைக்குச் சென்ற சிறுமியைப் பலவந்தப்படுத்திப் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார். அச்சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாய், சுரேஷைத் தடுத்து நிறுத்தப் போராடியுள்ளார். இருப்பினும் சுரேஷ் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடவே, ஆத்திரமடைந்த தாய் வீட்டிலிருந்த கத்தியை எடுத்துச் சுரேஷின் அந்தரங்க உறுப்பை வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்து தீவிர இரத்தப்போக்கு ஏற்பட்டதால் சுரேஷ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

போலீசார் தீவிர விசாரணை
தகவலறிந்து வந்த அனந்தபுரம் நகர போலீசார், படுகாயமடைந்த சுரேஷை மீட்டுச் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
