Homeசெய்திகள்அரசியல்"நிர்வாகத் திறனற்ற டம்மி முதல்வர்" — தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!

“நிர்வாகத் திறனற்ற டம்மி முதல்வர்” — தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!

-

- Advertisement -

“விவசாயிகளின் பிரச்சினைகளை வரும் சட்டமன்றக் கூட்டத்தில் எழுப்புவோம். நிர்வாகத் திறனற்ற ஒரு டம்மி முதல்வரால் இந்த நிலைமை தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ளது” என தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் சாடினார்.

உதயநிதி ஸ்டாலின்

we-r-hiring

தஞ்சாவூரில் தவெக அரசைக் கண்டித்து திமுக சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வரவேற்புரையாற்றினார். இதில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ஜவாஹிருல்லா, மக்கள் ஜனநாயக கட்சி மாநிலத் தலைவர் தமிமுன் அன்சாரி, திராவிடர் கழக மாநில பொதுச் செயலாளர் ஆர்.ஜெயக்குமார், திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

வறண்டு காணப்படும் காவிரி – தவிக்கும் விவசாயிகள்:

ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “ஆடிப்பெருக்கு காலத்தில், காவிரி டெல்டா ஆறுகள் தண்ணீர் இன்றி வறண்டு பாலைவனம் போல காட்சி அளிக்கின்றன. குறுவை சாகுபடியைக் காப்பாற்ற முடியாமல், சம்பா சாகுபடியின் நிலை என்னவாகுமோ என்று விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். காவிரி மேலாண்மை வாரியத் தீர்ப்பின்படி கிடைக்க வேண்டிய உரிய தண்ணீரைப் பெற தமிழக அரசு தவறிவிட்டது” என்று குற்றம் சாட்டினார்.

திமுக முன்வைக்கும் முக்கியக் கோரிக்கைகள்:

  • சட்டப் போராட்டம்: மேகேதாட்டு அணை கட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்தும், தமிழக விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும், தமிழக அரசு உரிய சட்டப் போராட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்.

  • நிவாரணத் தொகை: குறுவை சாகுபடி பொய்த்ததால் சுமார் 14 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும்.

  • விவசாய மானியங்கள்: பயிர் காப்பீட்டு பிரீமியத்தை அரசே ஏற்பதுடன், சம்பா சாகுபடிக்குத் தேவையான விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை மானிய விலையில் வழங்க வேண்டும்.

  • கடன் தள்ளுபடி: தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டமன்றத்தில் குரல் எழுப்புவோம்:

“விவசாயிகளின் கோரிக்கைகளையும், காவிரி நீர் தொடர்பான உரிமைகளையும் வலியுறுத்தி, ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் திமுக சார்பில் உறுதியாகக் குரல் எழுப்பப்படும். மக்கள் மன்றம், நீதிமன்றம், சட்டமன்றம் என அனைத்து தளங்களிலும் விவசாயிகளின் உரிமைகளுக்காக திமுக தொடர்ந்து துணைநிற்கும்” என்றும் அவர் உறுதி அளித்தார்.

“பிரச்சினையைத் திசைதிருப்பும் ரீல்ஸ் அரசு”:

தொடர்ந்து அரசைச் சாடிய அவர், “விவசாயிகளின் கண்ணீரைப் பற்றி கவலைப்படாமல் அமைச்சர்கள் படம் பார்த்து கண்ணீர் விடுகின்றனர். ஏதாவது ஒரு பிரச்சினை வந்தால், அதை எப்படி திசைதிருப்புவது என்ற வேலையில் ஈடுபடுகின்றனர். ஒரு பிரச்சினை என்று வந்தால் தீர்வு காண்பதுதான் நல்ல அரசு. ஆனால், தவெக அரசு பிரச்சினை என்றால் திசைதிருப்பும் வேலையைத்தான் பார்க்கிறது.

காவிரிப் பிரச்சினையை தமிழகமே தீவிரமாக பேசிக் கொண்டிருக்க, முதல்வர் விஜய் ஆய்வு என்கிற பெயரில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார். முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் ரீல்ஸ் போட்டுக்கொண்டு சுற்றுகின்றனர். கழிவறையக் கூட விட்டுவைக்காமல் ரீல்ஸ் போடுகின்றனர். இந்த அரசுக்கு ரீல்ஸ் வெறி முத்திப்போய் உள்ளது. இதுபோன்ற ஒரு ரீல்ஸ் போடும் கேடு கெட்ட அரசை தமிழகம் இதுவரைக் கண்டதில்லை.” என்றார்.

திமுக ஆட்சியின் சாதனையைச் சுட்டிக்காட்டி கேள்வி:

“2021-ல் இருந்து 2025-ம் ஆண்டு வரை சரியாக ஜூன் மாதம் மேட்டூர் அணையை திறந்து வைத்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால், இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஆகியும் தண்ணீர் திறக்கவில்லை. காவிரி மேலாண்மை தீர்ப்புப்படி ஜூன், ஜூலை மாதத்துக்கான 42 டி.எம்.சி தண்ணீர் வந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. ஏனென்றால் முதல்வர் விஜய்க்கு அதுபற்றிய கவலை இல்லை என்பதால் தனது வாயையும் திறப்பதில்லை. திமுக மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்பதில் மட்டுமே அவரது கவனம் இருக்கிறது.

ஆடி 18-ம் நாளான இன்று ஆடிப்பெருக்கில் ஆறு முழுவதும் தண்ணீர் வழிந்து ஓடும். ஆனால், இப்போது டெல்டா நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. திமுக ஆட்சி இருந்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? நிர்வாகத் திறனற்ற ஒரு டம்மி முதல்வரால் இந்த நிலைமை தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடக முதல்வரைப் பார்ப்பது இருக்கட்டும்… நமது ஊரு விவசாயிகளைச் சந்தித்தாரா? அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டாரா?” என்று உதயநிதி ஸ்டாலின் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடுக! உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அதிரடி மனுத் தாக்கல்

MUST READ