“விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 7 நாட்களுக்குள் தாயகம் திரும்ப விரைவு நடைமுறையை உருவாக்க வேண்டும்” – பொதுநல வழக்கில் நீதிபதிகள் அதிரடி ஆணை.
இலங்கை நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் தாயகம் திரும்ப முடியாமல் அங்குள்ள சிறைகளில் தவிக்கும் தமிழ் மீனவர்கள் உடனடியாக நாடு திரும்புவதற்கான உரிய நடைமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கில், ஒன்றிய மீன்வளத்துறைச் செயலர் பதில் மனுத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பொதுநல வழக்குத் தாக்கல்
ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் தெரிவித்திருந்ததாவது. “இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதில் இலங்கை நீதிமன்றங்களால் விடுதலை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், பல மீனவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தொடர்ந்து சிறைக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்போது 24 மீனவர்கள் அவ்வாறு தவிக்கின்றனர். இதில் 5 பேரின் விவரங்கள் மட்டுமே முழுமையாகத் தெரியவந்துள்ளது.
மேலும், விடுவிக்கப்படும் மீனவர்கள் கப்பல் வழியாக அல்லாமல் விமானம் மூலமாகவே தாயகம் அனுப்பப்படுகின்றனர். இதற்காக அவர்களுக்கு அவசரக் கடவுச்சீட்டு (PASSPORT) பெறுவதில் பெரும் காலதாமதம் ஏற்படுகிறது. போதிய வசதிகளின்றி அவர்கள் அங்குள்ள சிறைகளில் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, விடுவிக்கப்பட்டும் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழக மீனவர்களின் முழு விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். அத்துடன், எதிர்காலத்தில் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் மீனவர்கள் 7 நாட்களுக்குள்ளாக நாடு திரும்புவதை உறுதி செய்யும் வகையில் விரைவான செயல்முறை விதிகளை (STANDARD OPERATING PROCEDURE) உருவாக்க உத்தரவிட வேண்டும்.”
நீதிபதிகள் உத்தரவு
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து ஒன்றிய மீன்வளத்துறைச் செயலர் உரிய பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
