அரசு ஊழியர்களுக்காக அறிவிக்கப்பட்ட உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) செயல்படுத்துவது குறித்து, சட்டப்பேரவையில் எழுந்த கேள்விகளுக்குத் தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் விளக்கமளித்துள்ளார்.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது, தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்காக போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது குறித்தும், இத்திட்டத்தின் தற்போதைய நிலை குறித்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், “அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) திறம்படச் செயல்படுத்தத் தமிழ்நாடு அரசு தயாராகவே உள்ளது.

இருப்பினும், மாநிலத்தின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டும், இத்திட்டத்திற்கான நிதிப் பங்களிப்பை உறுதி செய்யவும் கூடுதல் கடன் வாங்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே, ஒன்றிய அரசு தமிழ்நாடு கூடுதல் கடன் வாங்குவதற்கு உரிய அனுமதி அளிக்கும் பட்சத்தில் மட்டுமே இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் முழுமையாக அமையும்” எனத் தெரிவித்தார். மாநில அரசின் கடன் வாங்கும் வரம்பு மற்றும் நிதி மேலாண்மை குறித்து ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாக நிதியமைச்சர் அளித்த இந்த விளக்கம், அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல்களத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
