டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில், 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளுக்கான சங்கீத் நாடக அகாடமி விருதுகளைக் குடியரசுத் தலைவர் வழங்கி கௌரவித்தார். நாடக நடிகருக்கான விருதைத் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நடிகரும் நாடகக் கலைஞருமான வாகை சந்திரசேகர் பெற்றுக்கொண்டார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த இசை, நடனம், நாடகம், பாரம்பரிய நாட்டுப்புற மற்றும் பழங்குடியினக் கலைகள், பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்த்து கலை வடிவங்களில் சிறந்து விளங்கிய 115 கலைஞர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டன.

விருது விவரங்கள்: அகாடமி ஃபெல்லோஷிப் (அகாடமி ரத்னா): சங்கீத் நாடக அகாடமியின் உயரிய கௌரவமான ஃபெல்லோஷிப் விருது 7 கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது.
அகாடமி விருது (அகாடமி புரஸ்கார்): கலைத்துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 108 கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது.
பரிசுத் தொகை: 1952-ஆம் ஆண்டு முதல் கலைத்துறைச் சாதனைகளுக்காக வழங்கப்பட்டு வரும் இவ்விருதுகளில், ஃபெல்லோஷிப் பெறுபவர்களுக்கு ரூ.3 லட்சமும், அகாடமி விருது பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. “விருதை தமிழ்நாட்டு நாடகக் கலைஞர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்” வாகை சந்திரசேகர் நெகிழ்ச்சி!
“குடியரசுத் தலைவர் கரங்களால் இந்த விருதைப் பெற்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு முன்பாக கடந்த 2003-ஆம் ஆண்டு, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் கையால் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றிருந்தேன்.
நமது மொழி, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டைக் காப்பதில் நாடகக் கலை மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. இன்றைய அறிவியல் வளர்ச்சியால் நாடகக் கலை சற்றே பின்னோக்கிச் சென்றது போலத் தோன்றலாம், ஆனால் கலை மற்றும் மொழியின் சிறப்புக்கு நாடகமே அடிப்படை. மத்திய அரசின் இந்த விருது நாடகக் கலையை மேலும் முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான உத்வேகத்தை எனக்கு அளித்துள்ளது.”
மேலும் அவர் பேசுகையில், “நான் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த காலத்திலும் நாடகங்களில் நடிப்பதைத் தவிர்க்கவில்லை. எத்தனை தொழில்நுட்ப வளர்ச்சி வந்தாலும் நாடகக் கலை போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த வகையில் இந்த விருதைச் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நாடகக் கலைஞர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
தற்போது நாடகக் கலைஞர்கள் திரைத்துறைக்கு வரும் எண்ணிக்கை குறைந்துள்ளதால், நாடகக் கலையை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கத் தொடர்ச்சியாக மேடைகள் அமைத்து அதனை வளர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
