தமிழகச் சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை ரத்து செய்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க விரிவான அறிவிப்புகளை வெளியிட்டார். “தமிழக மக்கள் நம் உயிர் என்றால், நமது விவசாயிகள் நம் உயிர்நாடி” எனத் தெரிவித்த முதலமைச்சர், நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டாா்.
பயிர்க்கடன் தள்ளுபடி விவரங்கள் மற்றும் அளவீடுகள்
கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகள் மூலம் கடன் பெற்ற விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பயிர்க்கடன் தள்ளுபடி வரம்புகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன:
100% முழுத் தள்ளுபடி: ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்றுள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களும் 100 சதவீதம் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.

ரூ.75,000 வரை தள்ளுபடி: ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி வழங்கப்படும்.
ரூ.35,000 தள்ளுபடி: ரூ.1 லட்சத்திற்கு மேல் பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு ரூ.35,000 வரை கடன் தள்ளுபடி அளிக்கப்படும்.
13.34 லட்சம் விவசாயிகள் பயன்பெறுகின்றனர்
மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 13.34 லட்சம் விவசாயிகள் இந்த அதிரடித் திட்டத்தின் மூலம் நேரடியாகப் பயன்பெறுவார்கள் என்றும், இதற்காக மொத்தமாக ரூ.6,220 கோடி அளவிலான பயிர்க்கடன்கள் அரசுத் திட்டத்தின் கீழ் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
அரசுக்கு ரூ.953.06 கோடி கூடுதல் நிதிச்சுமை
ஏற்கெனவே அமலில் இருந்த கடன் தள்ளுபடி வரம்பை உயர்த்தி விரிவாக்கம் செய்ததன் காரணமாக, தமிழக அரசுக்கு ரூ.953.06 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் எனக் கூறிய முதலமைச்சர், நிதி நெருக்கடியைப் பொருட்படுத்தாமல் உழவர் பெருமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவே இந்த கூடுதல் நிதியை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
