தூத்துக்குடி விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கர்நாடகாவில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடன்றி, தமிழக அரசின் 100 நாள் ஆட்சிக் காலம் குறித்தும் பல்வேறு திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
நயினார் நாகேந்திரன் பேசியதாவது:
3 பேர் சுட்டுக்கொலை – கர்நாடக முதலமைச்சருக்குக் கண்டனம்:
கர்நாடகாவில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கர்நாடக முதலமைச்சருக்குப் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுட்டுக்கொல்வதற்கு எவருக்கும் உரிமையில்லை; உயிரைப் பறிப்பதற்கு முதலமைச்சர் என்ற அதிகார தோரணையில் அவர்களுக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. சுடப்பட்டவர்கள் கர்நாடக மக்களாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி இத்தகைய செயலை ஏற்றுக்கொள்ள முடியாது.
அமைச்சர்கள் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள்” – ஊழல் பட்டியல் தயார்:
தமிழக அரசின் 100 நாள் ஆட்சி என்பது மக்களுக்கு மிகுந்த வேதனையான நாட்களாகவே அமைந்துள்ளது.
தமிழக அமைச்சர்கள் அனைவரும் தங்களது வேலையை ஆரம்பித்துவிட்டார்கள்; அதாவது லஞ்சம் வாங்கத் தொடங்கிவிட்டார்கள். யார் யார் எங்கு வாங்குகிறார்கள் என்ற முழுப் பட்டியலும் (List) தற்போது எங்கள் கையில் உள்ளது.
குறிப்பாகத் தமிழக முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள துறையிலேயே டெண்டர் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளன. இது தொடர்பான அனைத்து விவரங்களையும் ஆதாரங்களுடன் விரைவில் வெளியிடுவோம்.
தமிழக அரசு மற்றும் அமைச்சர்கள் மீதான நயினார் நாகேந்திரனின் இந்த அதிரடி குற்றச்சாட்டுகள் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
