தமிழக அரசியலில் தற்போது அரங்கேறி வரும் அதிரடி நாடகங்களும், பதவி மோகத்தால் அரசியல்வாதிகள் மாட்டித் தவிக்கும் சட்டச் சிக்கல்களும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. ‘மாற்றம், முன்னேற்றம்’ என்ற முழக்கத்துடன் களமிறங்கிய தவெகவினர், தாங்களே உருவாக்கிய சட்டக் குழப்பங்களில் சிக்கித் தவிப்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்பி லட்சுமணன் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளாா். 
ராஜினாமா நாடகமும் நகைமுரணும்
அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா தற்போது அரங்கேற்றி வரும் சட்டப் போராட்டம் கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சபாநாயகர் தனது ராஜினாமாவை ஏற்றது சரிதான் என்று ஒருபுறம் வாதிடும் அவர், மறுபுறம் கட்சி தாவல் தடைச் சட்டம் தன் மீது பாயாது என்றும், நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை தன்னை மீண்டும் எம்.எல்.ஏ-வாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதைக் கடுமையாக விமர்சித்துள்ள எஸ்பி லட்சுமணன், “ஆரம்பத்தில் ‘மாற்றம்’ என்று முழக்கமிட்டுவிட்டு, இப்போது இதுபோன்ற முரண்பாடான சட்டச் சிக்கல்களில் தாங்களே போய் மாட்டிக்கொள்வது மக்களைப் பார்த்துச் சிரிக்க வைக்கிறது. இவ்வளவு அவசரமாகப் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
அவசர புத்திக்குக் கிடைத்த சம்மட்டி அடி
சொந்தக் கட்சியில் அதிருப்தி தெரிவித்து, அவசரப்பட்டுப் பதவிகளைத் துறந்துவிட்டுப் பின்னர் தவெகவைச் சார்ந்தவர்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். இதுகுறித்து பேசிய எஸ்பி லட்சுமணன், “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அன்று தன் முடிவுகளில் கூடுதல் உறுதியுடன் செயல்பட்டிருந்தால், போர்க்கொடி தூக்கிய பலரின் அரசியல் வாழ்வே அன்றோடு முடிவுக்கு வந்திருக்கும். சொந்தக் கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டு, மாற்று வழியைத் தேடியவர்களின் இன்றைய நிலைமை ஒட்டுமொத்த அரசியல்வாதிகளுக்கும் ஒரு சரியான பாடமாகும்” என்றார்.
மக்களை ஏமாற்றும் சுயநல அரசியல்
பொதுமக்களின் நலனுக்காகத் தங்களது பதவிகளைத் தியாகம் செய்தோம் என்று தம்பட்டம் அடிக்கும் தலைவர்கள், உண்மையில் தங்களது சுயநலனுக்காகவும் பதவிகளுக்காகவும்தான் இந்த நாடகங்களை அரங்கேற்றுகிறார்கள் என்பதை மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தனிமனிதர்களின் சுயநலக் கோரிக்கைகளும், அவசரப்பட்டு எடுக்கப்படும் பிழையான முடிவுகளும் அரசியலை எந்த அளவுக்குக் கீழ இறக்குகின்றன என்பதற்கு இந்த விவகாரமே சாட்சியாகும். அரசியல்வாதிகள் செய்யும் ஒவ்வொரு தகிடுதத்தத்தையும் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற பயம் இனியாவது அவர்களுக்கு வர வேண்டும் என்று எஸ்பி லட்சுமணன் எச்சரித்துள்ளார்.
