இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மூத்த மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்ச, பல நூறு கோடி ரூபாய் ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்முதல் ஊழல் மற்றும் லஞ்ச வழக்கில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் இரத்த வெள்ளத்தில் ஆட்சியைத் தக்கவைத்த ராஜபக்ச குடும்பத்தினரின் இந்த அதிரடி வீழ்ச்சி, இலங்கை அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.19,000 கோடி ஏர்பஸ் ஒப்பந்தமும் லஞ்சப் புகாரும்
கடந்த 2013-ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில், அரசுக்குச் சொந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (Srilankan Airlines) நிறுவனத்திற்காக ஐரோப்பிய ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 10 அதிநவீன விமானங்களை வாங்குவதற்கு 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ₹19,000 கோடி) மதிப்பில் பிரம்மாண்ட ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தைக் கைப்பற்றுவதற்காக ஏர்பஸ் நிறுவனம், அப்போதைய ஆளும்கட்சியான ராஜபக்ச குடும்பத்தினருக்கும் அரசு உயரதிகாரிகளுக்கும் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாகக் கடுமையான புகார்கள் எழுந்தன. சர்வதேச அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த ஊழல் குறித்து அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் கூட்டு விசாரணை மேற்கொண்டு வந்தன.

விசாரணை அதிகாரி மர்ம மரணமும் சிஐஏ அம்பலப்படுத்திய வங்கி கணக்குகளும் இந்த சர்வதேச விசாரணையின் போது, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேன அதிர்ச்சி வாக்குமூலம் ஒன்றை அளித்தார். அதில், ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்ற லஞ்சப் பணத்தில் சுமார் 5 லட்சம் அமெரிக்க டாலரை நமல் ராஜபக்சவிடம் நேரடியாக ஒப்படைத்ததாக ஒப்புக்கொண்டார். ஆனால், இந்த வாக்குமூலம் அளித்த சில நாட்களிலேயே, கபில சந்திரசேன தனது உறவினர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் சந்தேகத்தைக் கிளப்பியது.
இருப்பினும், பன்னாட்டுப் புலனாய்வு அமைப்புகள் விசாரணையைத் தீவிரப்படுத்தின. அதில், சிங்கப்பூரில் உள்ள இரு இரகசிய வங்கிக் கணக்குகள் வழியாகப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதும், அதில் 8 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ₹6.5 கோடி) நேரடியாக நமல் ராஜபக்சவின் கணக்கிற்குச் சென்றடைந்ததும் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்க உளவு அமைப்புகளின் கூட்டு விசாரணையில் அச்சு அசலாகப் படம்பிடித்து அம்பலப்படுத்தப்பட்டது.

நீதிமன்றம் அதிரடி உத்தரவு – சிறையில் நமல்!
இந்தச் சர்வதேச ஆதாரங்களின் அடிப்படையில், இலங்கையின் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நமல் ராஜபக்சவை அதிரடியாகக் கைது செய்தனர். கொழும்பு கூடுதல் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, வரும் 18-ஆம் தேதி வரை விளக்கமறியலில் (காவலில்) வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டார்.
தங்கள் மீதான அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளையும் ராஜபக்ச குடும்பத்தினர் மறுத்து வரும் நிலையிலும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என வாதிட்டு வரும் நிலையிலும், பன்னாட்டு உளவு அமைப்புகளின் வலுவான ஆதாரங்களால் நமல் ராஜபக்ச சிறை சென்றுள்ளது இலங்கை அரசியலில் ராஜபக்ச குடும்பத்தின் ஆதிக்கத்திற்கு வைக்கப்பட்ட மிகப்பெரிய செக்-மேட்டாகப் பார்க்கப்படுகிறது.
