தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் மனிஷ் அறிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் பின்னணி தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் சத்தியபாமா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் காலியான இத்தொகுதிக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அனைத்துக் கட்சி கூட்டம் – அதிமுக, தவெக புறக்கணிப்பு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இருப்பினும், இக்கூட்டத்தை அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் புறக்கணித்தனர்.
மாவட்டம் முழுவதும் நடத்தை விதிகள்: கொந்தளிப்பில் வர்த்தகர்கள் தாராபுரம் தொகுதிக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதிக்காமல், திருப்பூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.
இதற்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும், தொழிலதிபர்களும் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
பிரபல தொழில் நகரமான திருப்பூரில் மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமுறைகள் கடுமையாக்கப்படுவதால், ரொக்கப் பணப் பரிமாற்றம் மற்றும் தொழில் சார்ந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வர்த்தகம் பெரும் முடக்கத்தைச் சந்திக்கும் என அரசியல் கட்சி பிரமுகர்களும் வர்த்தக அமைப்பினரும் கவலை தெரிவித்துள்ளனர்.
