தமிழ்நாட்டில் காவிரி ஆற்றினால் பாசன வசதி பெறும் நிலப்பரப்புகள் தொடர்ந்து வறண்டு காணப்படும் நிலையில் போதியளவு நீரை கர்நாடகா திறந்து விடவும் மறுத்து வருகிறது.
இந்நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் இன்று நடைபெற்ற முடிந்தது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா & புதுச்சேரி உள்ளிட்ட மாநில அரசுகளின் நீர்வளத்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேலும் கூட்டத்தின் போது கர்நாடகாவின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் நீர் வரத்தும் குறைந்துள்ளது! எனவே கடந்த கூட்டத்தின் போது காவிரியில் கர்நாடக அரசு திறந்து விட உத்தரவிடப்பட்ட 9,000 கன அடி நீரை 2,000 கன அடி நீராக குறைக்க வேண்டும் என கர்நாடகா அரசு கோரிக்கையை வைத்தது.
ஆனால், தமிழ்நாட்டின் பல பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்படும் நிலையில் வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கு கர்நாடக அணைகளில் போதிய அளவு நீர் இல்லை என கூட்டத்தின் போதே கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருதரப்பு கோரிக்கைகளையும் கேட்டுக் கொண்ட காவிரி நீர் ஒழுங்காற்று குழு அடுத்த 15 நாட்களுக்கு 6,000 கன அடி நீர் வீதம் காவிரியில் நீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை வழங்கியது.
இந்நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு கூடவுள்ள நிலையில் அதில் இந்த பரிந்துரை உத்தரவாக கர்நாடக அரசுக்கு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
