சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜயின் பேச்சு மிகவும் கீழ்த்தரமாக அமைந்திருந்ததாகக் கடுமையாக விமர்சித்துள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “மக்கள் மீதே பழியைப் போட்டு நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்பதற்கு அரசாங்கம் தேவையில்லையே!” என அதிரடியாகக் சாடியுள்ளார்.
ஏமாற்றமளித்த பேரவை உரை
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி. கூறுகையில், “காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் அதுபற்றிப் பேசாமல் தேவையற்ற விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்” எனக் குற்றம்சாட்டினார்.

சட்டம் – ஒழுங்கு சீர்கேடு
தொடர்ந்து பேசிய அவர், “விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் நாள்தோறும் கொலைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
தமிழகம் மிகவும் மோசமான சூழ்நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. இதைச் சரி செய்ய என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்ற தெளிவான பதிலைப் பேசாமல், பழைய கதைகளைப் பேசிக் கொண்டிருக்கிறார்” என்றார்.
நீதிமன்ற செல்லாத அறிக்கைகள்
“50 ஆண்டுகளுக்கு முன்பான, நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தவே முடியாத, எந்தவொரு நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளாத பயனற்ற சில கமிஷன் அறிக்கைகளைப் படித்துவிட்டு அதுதான் உலகளாவிய உண்மை என நினைத்துக் கொண்டு முதலமைச்சர் பேசியுள்ளார்.
மேலும், வரலாற்று உண்மைகள் எதுவும் தெரியாமல் மிசா எமர்ஜென்சியை கொச்சைப்படுத்தியுள்ளார்” என்றும் கனிமொழி தெரிவித்தார்.
அரசாங்கத்தின் பொறுப்பு என்ன?
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதை உணராமல், மற்றவர்கள் மீது சேற்றை அள்ளி வீசுவதையே சட்டமன்ற நடவடிக்கையாகக் கேலிக்கூத்தாக மாற்றிவிட்டதாகச் சாடிய அவர், “மக்களாகப் பார்த்து திருந்த வேண்டும், காப்பாற்றிக் கொள்ள வேண்டும் எனப் பேசுவதற்கு முதலமைச்சருக்குப் பொறுப்பு இருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை.
மக்கள் மீதே பழியைப் போட்டுவிட்டு அரசாங்கம் ஒதுங்கிக் கொள்ள முடியாது” எனத் தெரிவித்தார்.
