குஜராத் மாநிலம் காந்திநகரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ‘பாஸ்கி தி எம்பயர்’ (Bhaski The Empire) என்ற வணிக வளாகத்தில் எதிர்பாராதவிதமாக தளம் சரிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.


விபத்து நடந்தது எப்படி? நேற்று இரவு சுமார் 9:30 மணியளவில் கட்டிடத்தின் தளம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது எடைக் தாங்க முடியாமல் சாரக் கூரை திடீரென சரிந்து விழுந்தது. இதன் காரணமாக அங்கிருந்த பெரிய கிரேன் ஒன்றும் இடிபாடுகளின் மீது சாய்ந்து விபத்துக்குள்ளானது.
மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தல்: கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலரும் இடிபாடுகளுக்குள்ளும், கிரேனின் அடியிலும் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இடிபாடுகளை அகற்றுவதற்காக மற்றொரு பெரிய கிரேன் வரவழைக்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.
இதுவரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 12 தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் 10 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்பதால், நள்ளிரவையும் தாண்டி மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உயிரிழப்பு இல்லை: இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும், மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் மண்டல போலீஸ் ஐஜி வீரேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
