பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு போலி அடையாள அட்டையுடன் துப்பாக்கியுடன் உள்ளே நுழைய முயன்ற 24 வயது இளைஞர் மற்றும் அவரது பாதுகாவலரை மும்பைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.
போலி PMO அதிகாரி வேடம் – மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் (BKC) பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் முக்கிய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதற்காகப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், சோதனைக் சாவடியைக் கடந்து ரோஹன் பரேக் (24) என்ற இளைஞர் உள்ளே நுழைய முயன்றுள்ளார்.
அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்திச் சோதனை செய்தபோது, அவர் தான் பிரதமர் அலுவலக (PMO) அதிகாரி என்று கூறி போலி அடையாள அட்டையைக் காண்பித்துள்ளார்.
துப்பாக்கியுடன் சிக்கிய பாதுகாவலர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவரது அடையாள அட்டையின் மீது சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் அவர் வைத்திருந்தது போலி PMO அடையாள அட்டை என்பது உறுதி செய்யப்பட்டது.மேலும், அவருடன் வந்திருந்த நபர், தன்னைப் பாதுகாவலர் எனக் கூறிக்கொண்ட நிலையில், அவரிடம் துப்பாக்கி ஒன்று இருந்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, ரோஹன் பரேக் மற்றும் அவருடன் வந்த துப்பாக்கி ஏந்திய நபரை போலீசார் உடனடியாகக் கைது செய்தனர்.
போலீசார் மற்றும் குற்றப்பிரிவு விசாரணை – பிரதமர் வருகை தரும் உயர் பாதுகாப்பு மண்டலத்தில் போலி ஆவணங்களுடன் துப்பாக்கியுடன் நபர் பிடிபட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் மும்பைக் குற்றப்பிரிவு (Crime Branch) மற்றும் தீவிரவாத எதிர்ப்புப் படையினர் (ATS) தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் எதற்காக அங்கு வந்தார்கள், துப்பாக்கியுடன் வந்ததன் பின்னணி என்ன என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கப்பட்டுள்ளது.
