பூமிக்கு மேலே 35,884 கி.மீ உயரத்தில் இயங்கும்; 24 மணிநேரமும் தீவிர வானிலை மற்றும் எல்லை கண்காணிப்பு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), விண்வெளித் துறையில் மேலும் ஒரு மைல்கல்லாகத் தனது ‘EOS-05’ செயற்கைக்கோளை நிர்ணயிக்கப்பட்ட சரியான புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் வெற்றி கரமாக நிலைநிறுத்தி சாதனை படைத்துள்ளது.

இந்தியாவின் முதல் புவி ஒத்திசைவு சுற்றுப்பாதை (Geosynchronous Orbit) இமேஜிங் செயற்கைக்கோளான EOS-05, பூமிக்கு மேலே 35,884 கிலோமீட்டர் உயரத்தில் நிலைகொள்ளச் செய்யும் இறுதிப் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.
24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு
பூமியைத் தொடர்ந்து கண்காணிக்கும் நோக்கில் ஏவப்பட்ட இந்த அதிநவீன இமேஜிங் செயற்கைக்கோள், புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையை அடைந்துள்ளதன் மூலம் நாட்டின் பாதுகாப்பிற்கும் வானிலை ஆய்விற்கும் மிகப்பெரிய பலத்தைச் சேர்த்துள்ளது.
இச்செயற்கைக்கோளின் முக்கிய அம்சங்கள்
தீவிர வானிலை கண்காணிப்பு: புயல், கனமழை, சூறாவளி போன்ற தீவிர வானிலை மாற்றங்களை உடனுக்குடன் துல்லியமாகக் கண்காணித்துத் தகவல்களை வழங்கும்.
எல்லை பாதுகாப்பு: நாட்டின் எல்லைப் பகுதிகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து, பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான அவசியமான தகவல்களைச் உடனுக்குடன் அனுப்பும்.
கடல்சார் கண்காணிப்பு: இந்தியக் கடல் பகுதிகள் மற்றும் கடலோர மண்டலங்களை 24 மணிநேரமும் இடைவிடாமல் கண்காணிக்கும் திறன் கொண்டது.
‘மிஷன் சக்சஸ்’ – இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
செயற்கைக்கோளைத் துல்லியமான உயரத்திற்குக் கொண்டு சேர்க்கும் கடினமான பாதை உயா்த்தும் புவிசார் இயக்கப் பணிகளை (Orbit Raising Maneuvers) இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளனர். இதன் மூலம் EOS-05 தன் இலக்கை அடைந்து, முழுமையான செயல்பாட்டிற்கு வந்துள்ளதாகச் சான்றளித்து ‘மிஷன் சக்சஸ்’ (Mission Success) என இஸ்ரோ முறைப்படி அறிவித்துள்ளது. இச்சாதனை நாட்டின் இயற்கை பேரிடர் மேலாண்மைக்கும், எல்லைப் பாதுகாப்பிற்கும் புதிய பரிமாணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
