நடிகர் விஜய், திரிஷா நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான ‘திருப்பாச்சி’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், அதன் ரீ-ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1-ம் தேதி இப்படத்தை மறுவெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.


ரீ-ரிலீஸ் ஏன் ஒத்திவைப்பு?
அக்டோபர் 1-ம் தேதியை ஒட்டி ஏற்கெனவே பல புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இதனால் திரையரங்குகளில் வெளியீடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் சூழலை கருத்தில் கொண்டு, ‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸை தற்காலிகமாக ஒத்திவைக்க விநியோக நிறுவனமான திருப்பதி பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தேதியில் ‘ஏழு கடல் ஏழு மலை’, ‘பத்தா’, ‘Mr Bhaarath’ உள்ளிட்ட படங்கள் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தன. மேலும், அக்டோபர் 2-ம் தேதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படமும் வெளியாக உள்ளது.
புதிய தேதி விரைவில் அறிவிப்பு
‘திருப்பாச்சி’ படத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ள நிலையில், புதிய ரீ-ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய திரைப்படங்களுக்கு உரிய வெளியீட்டு வாய்ப்பை வழங்கும் வகையிலும், திரையுலகின் தற்போதைய வெளியீட்டு சூழலை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.
21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திருப்பாச்சி
பேரரசு இயக்கத்தில் உருவான ‘திருப்பாச்சி’ திரைப்படத்தில் விஜய், திரிஷா, மணிவண்ணன், பசுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். குடும்ப பாசம், ஆக்ஷன் மற்றும் கிராமப்புற பின்னணியுடன் உருவான இப்படம் விஜய்யின் திரையுலகப் பயணத்தில் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றாக அமைந்தது.
21 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படம் மீண்டும் பெரிய திரையில் வெளியாக இருந்ததால் விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. தற்போது ரீ-ரிலீஸ் தள்ளிப்போயுள்ள நிலையில், புதிய தேதிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
“முதல்வர் விஜய் புரமோஷனுக்கு வர மாட்டார்! ‘சிக்மா’ படம் குறித்து ஓப்பனாக பேசிய ஜேசன் சஞ்சய்!”
