நீலகிரி மாவட்டம் உதகை அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 35 வயது நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


உதகை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனது பெற்றோருடன் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரகாஷ் அத்துமீறி நுழைந்து, ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், இந்த சம்பவத்தை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என மிரட்டி, தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில் சிறுமிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெற்றோர் அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் உதகை ஊரக போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர்.
இந்த வழக்கு உதகையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம். செந்தில்குமார், குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
