துப்பாக்கிச்சூட்டில் 3 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் பல ஆண்டுகளாக மோதல் நிலவி வந்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்துள்ளது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.

ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் பல ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்கு கரையில் செயல்பட்டு வந்துள்ளது. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

மேற்குகரையின் பல பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில், மேற்குகரையின் நப்லஸ் நகரில் உள்ள பலாடா அகதிகள் முகாமில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலையில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது, பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த மோதலில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். மேலும் ஆறு பேர் படுகாயமடைந்தனர். இந்த மோதலையடுத்து இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.