எந்த ஒரு படத்தையும் விமர்சனங்கள் வாயிலாக பார்க்க வேண்டாம் என நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை சர்வதேச திரைப்பட விழா மேடையில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய போது, “சர்வதேச திரைப்பட விழாவில் பார்த்த படங்களை கடந்து போய் விடாமல், படங்களின் வாயிலாக இயக்குனர்கள் உங்களுக்கு ஏதாவது கடத்த முயற்சி செய்வார்கள். படத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அதன் மூலம் ஆரோக்கியமான விவாதங்களில் ஈடுபடுங்கள். வாழ்க்கையின் அனுபவமாக திரைப்படம் மாறி வருகிறது. அந்த அனுபவத்தின் வாயிலாக தன்னுடைய பார்வையை ஒரு நடிகரின் வழியாக இயக்குனர் கூறுகிறார். முடிந்த அளவுக்கு ஒரு திரைப்படத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

அனைத்து சிறந்த இயக்குனர்களும் சிறந்த படத்தை எடுப்பார்களா என்று தெரியாது. ஆனால் சிறந்த படங்கள் அனைவராலும் எடுக்கப்பட்டு வருகிறது. நல்ல படங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். 50 வருடம் வாழ்ந்த ஒரு மனிதனின் கதையை இரண்டரை மணி நேரத்தில் சொல்ல முடியும். அந்த அனுபவத்தை இரண்டரை மணி நேரம் படத்தில் புரிந்து கொள்ள முடியும். படங்கள் அனைத்துமே விமர்சனங்கள் வாயிலாகவே பார்க்கப்படுகிறது. அப்படி பார்ப்பது நல்லதல்ல. எந்த ஒரு படத்தையும் விமர்சனங்கள் வாயிலாக பார்க்க வேண்டாம். இன்றைய காலகட்டத்தில் யூடியூபில் கெட்டதை பேசினால், பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அதனால்தான் பணம் வருகிறது. விமர்சனங்கள் பார்வையில் படம் சரியாக பார்க்கப்படுகிறதா? என்று தெரியவில்லை.
ஏற்கனவே ஒரு முறை நன்கொடை வழங்கி உள்ளேன். இப்போது மாமனிதன் படத்துக்கான சிறந்த நடிகர் விருதுக்காக வழங்கப்பட்ட பரிசுத் தொகையை (ரூ.25,000), சென்னை இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் கமிட்டிக்கு நன்கொடையாக வழங்குகிறேன். எளிய மனிதன் வாழ்க்கையைப் பேசும் இந்த மாமனிதன் படத்துக்காக விருது வாங்கியதில் மிகவும் மகிழ்ச்சி. அதோடு ‘பூ’ ராமு அவர்களுடன் சிறந்த நடிகருக்கான விருதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. இந்த ஆண்டு எப்படி முடிந்திருந்தாலும் பரவாயில்லை. அடுத்த ஆண்டு புதியதாக தொடங்குங்கள். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்” எனக் கூறினார்.