spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’…சென்சார் சான்று விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு…

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’…சென்சார் சான்று விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு…

-

- Advertisement -

ஜனநாயகன் படத்துக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்க உள்ளது.நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’…சென்சார் சான்று விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு…

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு உடனடியாக சென்சார் சான்று வழங்க வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சென்சார் போர்டு) தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு இன்று காலை தீர்ப்பு வழங்க உள்ளது.

we-r-hiring

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

சென்சார் போர்டு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை மறு ஆய்வு குழுவுக்கு (Revising Committee) அனுப்ப முடிவு செய்யப்பட்டதாகவும், அதனைப் பற்றி படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஜனவரி 5 ஆம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனிடையே, ஜனவரி 6 ஆம் தேதி தயாரிப்பு நிறுவனம் சென்சார் சான்று கோரி வழக்கு தாக்கல் செய்ததாக கூறப்பட்டது.

மேலும், வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய போதிய அவகாசம் வழங்கப்படாமல், மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பிய உத்தரவை தனி நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதாக சென்சார் போர்டு தரப்பு வாதிட்டது.

படத்தில் 14 காட்சிகளை நீக்க வேண்டும் என இடைக்காலமாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அதன்பிறகு மீண்டும் படத்தை பார்த்து முடிவெடுக்கப்படும் என்பதே அந்த முடிவு என்றும், 14 காட்சிகள் நீக்கப்பட்டதால் மட்டும் உடனடியாக சென்சார் சான்று வழங்க முடியாது என வாதிடப்பட்டது. மேலும், படம் தொடர்பாக புகார் வந்ததன் காரணமாகவே மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

படத்தை ஆய்வு செய்யும் குழு பரிந்துரை மட்டுமே வழங்க முடியும்; இறுதி முடிவை எடுப்பது சென்சார் போர்டு தான் என்றும், ‘ஜனநாயகன்’ படத்திற்கு சான்று வழங்குவது குறித்து வாரிய தலைவர் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் சென்சார் போர்டு தரப்பு தெரிவித்தது.

பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், படம் 9 ஆம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்ததால், அவசர வழக்காக தனி நீதிபதி முன் முறையிட வேண்டிய சூழல் ஏற்பட்டதாக விளக்கம் அளித்தார்.

படத்துக்கு எதிரான புகார் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும், மறு ஆய்வுக்கு அனுப்பப்படுவதாக தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும், படத்தை பார்வையிட்ட குழுவினர் உடனடியாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்து பரிந்துரை அளிக்க வேண்டும் என்றும், நான்கு நாட்கள் கழித்து புகார் அளிப்பது விதிமீறல் என்றும் தெரிவித்தார். சென்சார் தொடர்பான நடைமுறைகள் முழுவதும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

புகாரில் குறிப்பிடப்பட்ட காட்சிகள் ஏற்கனவே நீக்கப்பட்டவை என்றும், சான்று வழங்குவது குறித்து தகவல் தெரிவித்த பிறகு இரண்டு நாட்களுக்குள் சான்று வழங்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. மேலும், ரிலீஸ் தேதியை தெளிவுபடுத்தவில்லை என்றால் ஓடிடி தளம் சட்ட நடவடிக்கை எடுக்கும் அபாயம் உள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

விசாரணையின் போது, சென்சார் போர்டு தங்களது நடவடிக்கைக்கு ஆதரவாக பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர். ஒரே நாளில் அனைத்து நீதிமன்ற நடைமுறைகளையும் முடித்து உத்தரவு பெறுவது ஏற்கத்தக்கதல்ல என்றும் தெரிவித்தனர்.

மேலும், திரைப்படம் ஒரு வணிகம் என்பதால், சென்சார் சான்று பெறும் முன்பே தயாரிப்பாளர்கள் ரிலீஸ் தேதியை எப்படி அறிவிக்க முடியும் என்ற கேள்வியையும் நீதிபதிகள் எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தயாரிப்பு நிறுவனம் தரப்பு, படம் ஏற்கனவே 22 நாடுகளில் ஒப்புதல் பெற்றுள்ளதாகவும், இந்தியாவில் சான்று கிடைக்கும் வரை காத்திருந்து ரிலீஸ் தேதி அறிவிக்கும் நடைமுறை இல்லை என்றும் விளக்கம் அளித்தது. பாலிவுட்டிலும் பல திரைப்படங்கள் சென்சார் சான்று பெறும் முன்பே வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த 20 ஆம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான சென்சார் சான்று விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்க உள்ளது.

விஜயை மிரட்டிய பாஜக? தவெக கூட்டணிக்கு எந்த கட்சிகள் வரும்? எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!

MUST READ