எனக்கு அதிக வேலை ஏதும் இல்லை – ஆளுநர்
புது தொழில் முனைவோர் எண்ணிக்கையில் உலக நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “உலகில் உள்ள அனைவருக்கும் இரண்டு ஆசைகள் உள்ளது ஒன்று புகழ் பெற வேண்டும் இரண்டாவது பொருள் ஈட்ட வேண்டும் என்பது தான். ஒவ்வொருவருக்கும் பணம் என்பது முக்கியம் அதிக சொத்து சேர்க்க வேண்டும் என்ற பேராசை இல்லாமல் ஒருவர் தன்னுடைய வருமானத்தை அதிகரித்தால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. பல ஆண்டுகளாக இந்தியாவில் பிரச்சனைகள் உருவான பின் அதனை சரி செய்வதில் கவனம் செலுத்தி வந்தோம்.பிரச்சினை எங்கு உருவாகிறது என்பதை கண்டறியாமல் பிரச்சினைகள் உருவான பின் அதனை சரி செய்து வந்தோம். ஆனால் இன்று பிரதமர் பிரச்சினைகளை கண்டறிந்து அதனை சரி செய்து வருகிறது.
முந்தைய ஆட்சி காலத்தில் அரசு மூலம் மட்டுமே அனைத்தும் நடைபெற்று வந்தது. 130 கோடி மக்கள் உள்ள ஒரு நாட்டில் அரசு மூலம் மட்டுமே அனைத்தையும் சாதிக்க முடியாது. இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மனிதரும் வளர்ச்சியை நோக்கி நகர வேண்டும். 9 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் புது தொழில் முனைவோர் என்பது மிக மிக குறைவாக இருந்தது இன்று உலகில் 3வது அதிக புதிய தொழில் முனைவோர் உள்ள நாடாக உருவாகி உள்ளோம் அதற்கு காரணம் அரசு அனைவரையும் நம்பியது தான்,மக்கள் மீது நம்பிக்கை வைத்ததன் காரணமாகவே இந்தியா இன்று பொருளாதரத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
ஆளுநர் என்றால் நிறைய வேலைகள் இருக்கும் என்ற மாயை பொதுமக்கள் இடத்தில் உள்ளது. எனக்கு மட்டுமே தெரியும் நான் எனக்கு அதிக வேலைகள் இல்லை என்பது. கடந்த 8 ஆண்டுகளில் புதிய மருத்துவமனைகள் 70% அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் புதிதாக 1 லட்சத்து 50 ஆயிரம் சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது” என்றார்.