திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி- ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்
திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஒவ்வொரு ரயிலாக அனுமதிக்கப்படுகிறது.

மணப்பாறை- திருச்சி இடையே நடைபெறும் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்றுவருகிறது. இதனால் ஏற்பட்ட சிக்னல் பிரச்சனை காரணமாக திருச்சியில் இருந்து புறப்படும் 8 முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி- ஈரோடு, திருச்சி- தஞ்சாவூர், திருச்சி- கரூர் உள்ளிட்ட முன்பதிவில்லா ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இதேபோல் தென் மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய ஊழியர்கள், பணிக்கு செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட விரைவு ரயில்கள் இன்று 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, விழுப்புரம், கரூர்: முன்பதிவு இல்லாத ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் இருந்து வேளாங்கன்னி உள்ளிட்ட இடங்களுக்கு முன்பதிவு இல்லாத ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. திருச்சி -திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்றும், சென்னை எழும்பூர் -திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில், 2 மணி நேரம் தாமதமாக இன்று காலை 9.15 மணிக்கு புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
