சென்னையில் சர்வதேச புத்தக காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்.


அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “பொங்கலுக்கு பின் புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதுபோன்ற எந்த தகவலும் அரசு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. இரண்டரை மாதத்தில் ஏற்பாடு செய்து சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய புத்தகங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
சர்வதேச புத்தக கண்காட்சி மூன்று தினங்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சி புத்தகங்களை விற்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது இல்லை. இது வெளிநாடு புத்தகங்களை பிரபலப்படுத்துவதற்காக மட்டும்தான் நடைபெறுகிறது. நம் நல்ல இலக்கிய புத்தகங்கள் வெளிநாட்டுக்கு செல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நம் மாநிலத்தில் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். பார்வையாளர்களுக்கு மாலையில் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த புத்தக கண்காட்சியில் 30 நாடுகள் இடம்பிடித்துள்ளன.சர்வதேச புத்தக கண்காட்சியின் நிறைவு விழா 18 ஆம் தேதி நடைபெறும். அதில் முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ளார்” எனக் கூறினார்.


