புதுக்கோட்டை மாவட்டம் கே.ராயவரத்தில் நடந்த மஞ்சு விரட்டு போட்டியில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தார்.


பொங்கலை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் கிராமத்தில் மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான காளைகள் மந்தையில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டன. அவை நாளாபுரமும் சிதறி ஓடின. அவற்றை வீரர்கள் தீரத்துடன் பிடிக்க முயன்றனர். இதில் காளை ஒன்று ஆக்ரோஷமாக முட்டியதில், சிவகங்கை மாவட்டம் புதுவயலை சேர்ந்த கணேசன்(50) என்பவர் துடிதுடிக்க போட்டி நடைபெறும் இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து மஞ்சுவிரட்டு போட்டி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இப்போட்டியில் பார்வையாளர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீசார், போட்டியை நிறுத்தி பார்வையாளர்களை அப்புறப்படுத்திவருகின்றனர்.
