மத்தியக் கிழக்கில் இந்தியத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு ஒன்றிய அரசு உடனடி முன்னுரிமை தரவேண்டும் என சு. வெங்கடேசன் எம். பி. வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”மத்தியக் கிழக்கில், குறிப்பாக ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவி வரும் தற்போதைய போர்ச் சூழல், அங்கு வாழும் சுமார் ஒரு கோடி இந்தியர்களின், குறிப்பாகத் தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. தாக்குதல்கள் அதிகரித்து வரும் இக்கட்டான சூழலில், இந்திய அரசு தனது குடிமக்களைப் பாதுகாக்க வெறும் மீட்பு நடவடிக்கைகளை (Evacuation Operations) மட்டும் மேற்கொள்வது போதாது. அவர்களின் அடிமைத்தனத்திற்கு மூலக் காரணமாக இருக்கும் ‘கஃபாலா’ முறையைத் தூதரக ரீதியாகத் தகர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
‘கஃபாலா’ (Kafala) – நவீன கால அடிமைத்தனம்:
வளைகுடா நாடுகளில் நடைமுறையில் உள்ள ‘கஃபாலா’ எனப்படும் ஸ்பான்சர்ஷிப் முறை, ஒரு தொழிலாளியை அவரது முதலாளியுடன் சட்டரீதியாகக் கட்டிப்போடுகிறது.

இம்முறையில்:
தொழிலாளர்களின் கடவுச்சீட்டுகளை முதலாளிகள் சட்டவிரோதமாகப் பறிமுதல் செய்கின்றனர். முதலாளியின் எழுத்துப்பூர்வமான ‘வெளியேறும் அனுமதி’ இன்றி ஒரு தொழிலாளியால் போர்ச் சூழலில் கூடத் தாயகம் திரும்ப முடிவதில்லை .
ஊதிய நிலுவை மற்றும் பணி ஒப்பந்த மீறல்கள் குறித்துப் புகார் அளித்தால், அவர்கள் உடனடியாகக் கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டு நாடு கடத்தப்படும் அபாயம் உள்ளது .
இது உழைப்பைச் சுரண்டும் நவீன கால அடிமைத்தனமே தவிர வேறல்ல. போர் போன்ற நெருக்கடி காலங்களில் இந்நடைமுறை தொழிலாளர்களின் உயிரைப் பணயம் வைக்கிறது.
பிலிப்பைன்ஸ் மாடல் – இந்தியா கற்க வேண்டிய பாடம்:
நமது அண்டை நாடான பிலிப்பைன்ஸ், தனது புலம்பெயர் தொழிலாளர்களை (OFWs) பாதுகாப்பதில் உலகிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது . அந்நாடு பின்பற்றும் கீழ்க்கண்ட நடைமுறை முக்கியமான முன்னுதாரணம்.
முறையான எச்சரிக்கை அமைப்பு (Alert Level System): பிலிப்பைன்ஸ் அரசு போர்ச் சூழலில் 1 முதல் 4 வரையிலான எச்சரிக்கை நிலைகளை அறிவிக்கிறது . மூன்றாம் நிலை அறிவிக்கப்பட்டவுடன் விருப்பத்தின் பேரில் வெளியேறவும், நான்காம் நிலையில் கட்டாய வெளியேற்றத்தையும் அது சட்டரீதியாக உறுதி செய்கிறது.
அவசரகால நிதி உதவி: பிலிப்பைன்ஸ் அரசு தனது தொழிலாளர் நல வாரியம் (OWWA) மூலம் மீட்புப் பணிகளுக்குப் பின் ஒவ்வொரு தொழிலாளிக்கும் சுமார் 150,000 பெசோ (சுமார் ரூ.2.2 லட்சம்) நேரடி நிதியுதவி வழங்குகிறது .
மறுவாழ்வுத் திட்டங்கள்: தாயகம் திரும்பும் தொழிலாளர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் சுயதொழில் தொடங்க உடனடி கடன் வசதிகளை ஒருங்கிணைந்த முறையில் வழங்குகிறது .
ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் (MEA) பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறேன்:
கஃபாலா முறைக்கு எதிரான தூதரக அழுத்தம்: வளைகுடா நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டுள்ள இருதரப்பு ஒப்பந்தங்களில், ‘கஃபாலா’ முறையின் கீழ் தொழிலாளர்களின் கடவுச்சீட்டைப் பறிமுதல் செய்வதையும், வெளியேறும் அனுமதியைக் கட்டுப்படுத்துவதையும் முற்றிலுமாக நீக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்.
நிரந்தரப் புலம்பெயர் தொழிலாளர் நல நிதி: பிலிப்பைன்ஸின் OWWA போன்று, இந்தியாவிலும் வெளிநாடு செல்லும் ஒவ்வொரு தொழிலாளருக்கும் காப்பீடு மற்றும் அவசரகால மீட்பு நிதியை உள்ளடக்கிய ஒரு வலுவான அமைப்பை உருவாக்க வேண்டும்.
மாநில அரசுகளுடன் ஒருங்கிணைப்பு: தமிழக அரசு ஏற்கனவே அயலகத் தமிழர் நல வாரியம் மற்றும் பிரத்யேக உதவி எண்களை (1800 309 3793) அறிவித்துள்ளது. ஒன்றிய அரசு மீட்பு நடவடிக்கைகளின் போது மாநில அரசுகளின் தரவுகளைப் பயன்படுத்தி, மாவட்ட வாரியான மீட்பு மற்றும் மறுவாழ்வுத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்பந்தத்தை அங்கீகரித்தல்; சர்வதேச அளவில் புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் “அனைத்து புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை (1990)” என்ற ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்பந்தத்தில் இந்தியா இன்னும் கையெழுத்திடவில்லை. இதனை இந்தியா உடனடியாக அங்கீகரிக்க வேண்டும்.
இருதரப்பு ஒப்பந்தங்களில் ‘பாதுகாப்பு விதியினை’ சேர்த்தல்; இந்தியா மேற்கொண்டுள்ள “புலம்பெயர்வு மற்றும் நடமாடும் கூட்டாண்மை ஒப்பந்தங்களில்” (Migration and Mobility Partnership Agreements – MMPA) போர் அல்லது பேரிடர் காலங்களில் இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்றும் செலவை அந்தந்த நாடுகளே ஏற்க வேண்டும் என்ற ‘பாதுகாப்பு விதியை’ (Safety Clause) கட்டாயமாக்க வேண்டும்.
மறுவாழ்வுத் திட்டம்; போர்ச் சூழலால் வேலை இழந்து திரும்புவோருக்கு “NEEDS-SIM” போன்ற திட்டங்களின் கீழ் சிறுதொழில் தொடங்க ரூ.5 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடன் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.
நமது நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பிற்கு முதுகெலும்பாகத் திகழும் இந்தியத் தொழிலாளர்களின் உயிர் விலைமதிப்பற்றது. அவர்களை வெறும் ‘வருமானம் தரும் எந்திரங்களாக’ பார்க்காமல், அவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதே உடனடித் தேவையாகும் ”என மதுரை எம்.பி.சு. வெங்கேடசன் வலியுறுத்தியுள்ளாா்.


