நிமிடத்திற்கு நிமிடம் ரீல்ஸ் போட்டு தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் தவெக அரசு, திருப்பரங்குன்றம் கோயிலில் பக்கதர்களுக்கு அடிப்டை வசதிகளைக் கூட செய்து தர தவறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகாசி விசாகத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கடும் வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக குழந்தைகள், பெண்கள் உட்பட 87 பக்தர்கள் மயக்கமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மயக்கமடைந்த பக்தர்களுக்கு தேவசேனா மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், உடல்நிலை பாதிக்கப்பட்ட 2 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, திருப்பரங்குன்றம் வைகாசி விசாக விழாவிற்கு தேவையான முன்னேற்பாடுகளை அரசு முறையாக மேற்கொள்ளாததே இந்த நிலைக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் இந்த முக்கிய திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் அரசு தவறிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “நிமிடத்திற்கு நிமிடம் ரீல்ஸ் வெளியிட்டு தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் தவெக அரசு, பக்தர்களின் நலனில் போதிய அக்கறை காட்டவில்லை” என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இனிவரும் காலங்களில் கோயில் திருவிழாக்களுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு, தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையும் தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
