சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அவதூறு பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்குதானே தொடர முடியும் என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், பொது அமைதியைக் குலைப்பது மற்றும் கலவரங்களைத் தூண்டுவது உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்வதைத் தவிர்க்குமாறு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பழனி கோவில் நில விவகாரத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபுவின் (இந்து சமய அறநிலையத்துறை) உதவியாளர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட வினோத் சூர்யாகுமார் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பழனி கோவில் நில விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, சமூக ஊடகங்களில் போலியான மற்றும் அவதூறான தகவல்களைப் பரப்பியதாக வினோத் சூர்யா என்பவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர் மீது பொது அமைதியைக் குலைப்பது, கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படுவது போன்ற கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி வினோத் சூர்யாகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “இந்த வழக்கு முற்றிலும் அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்டது. இது குடிமகனின் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை சுதந்திரத்திற்கு எதிரானது” என்று குறிப்பிட்டிருந்தார்.
நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்
இந்த வழக்கு நீதிபதி பரதசக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.சரவணன், “கோவில் நில நிர்வாகத்தில் உள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம், அது பொது நலனுக்குப் பயன்படும் என்ற உண்மையான நம்பிக்கையின் பேரிலும், கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும்தான் அந்தப் பதிவுகள் வெளியிடப்பட்டன. இதில் அமைச்சர் மீது தனிப்பட்ட விரோதமோ அல்லது பழிவாங்கும் உணர்வோ மனுதாரருக்கு இல்லை” என்று வாதிட்டார்.

நீதிபதி எழுப்பிய கேள்வி & அறிவுறுத்தல்:
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பரதசக்ரவர்த்தி, சமூக வலைத்தளப் பதிவுகளுக்குக் கலவரப் பிரிவுகளைப் பயன்படுத்துவது குறித்துக் கடும் அதிருப்தி வெளியிட்டார். “இத்தகைய பதிவுகளுக்குப் பொது அமைதியைக் குலைப்பது, கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படுவது போன்ற பிரிவுகள் எப்படிப் பொருந்தும்? சமூக வலைத்தளப் பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்குதானே தொடர முடியும்? எனவே, இது போன்ற வழக்குகளில் கலவரங்களைத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்வதைத் தவிர்க்குமாறு அரசுக்கு அறிவுறுத்துங்கள்” என்று அரசு குற்றவியல் வழக்கறிஞர் ரியாஷிடம் நீதிபதி தெரிவித்தார். இருப்பினும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என்று குறிப்பிட்ட நீதிபதி, இதுகுறித்து காவல்துறை விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். உயர்நீதிமன்றத்தின் இந்த அறிவுறுத்தல் சமூக வலைத்தள அரசியல் விமர்சன வழக்குகளில் முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
ஒரே மாதத்தில் ரூ.4,500 உயர்வு! ஈரோடு சந்தையில் மளமளவென எகிறும் மஞ்சள் விலை – பின்னணி என்ன?
