விஜயகாந்த் நேற்று காலை உயிரிழந்த நிலையில் அவரின் உடலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரண்டு வந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்போது தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பட பிரபலங்கள் என பலரும் வந்து தங்களின் இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் செந்தூரப்பூவே திரைப்படத்தில் விஜயகாந்த் உடன் இணைந்து நடித்த ராம்கி, விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து விஜயகாந்த் குறித்து சில நினைவுகள் பற்றி கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது,” செந்தூரப்பூவே படத்தில் அவர் கேப்டனாக நடித்திருந்த போதே அவரின் பெயர் கேப்டனாக மாறிவிட்டது. கேப்டன் வருகிறார் கேப்டன் போகிறார் என்று அப்பொழுதே அவரை எல்லாரும் கேப்டன் என்று அழைக்க தொடங்கினோம். அதன் பின்னர் தான் மிகப்பெரிய படமான கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்தார் விஜயகாந்த்.
எல்லோருக்கும் சமத்துவம் வேண்டும் என்று எங்களுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்ந்தவர் விஜயகாந்த். உடல் பலமும் மன பலமும் உடையவர். இன்றைக்கு எல்லோரும் நன்றாக இருக்கிறோம் என்றால் அதற்கு விஜயகாந்த் தான் காரணம். நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டெடுத்தவர். அவர் நம்மை விட்டுப் போகவில்லை நம் எல்லோருடனும் இருக்கிறார். அவரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவரிடம் வேண்டிக் கொள்கிறேன்” என்று பேசியுள்ளார்.
- Advertisement -