பழனி முருகன் கோவிலில் நடைபெறும் குடமுழுக்கு விழாவை தமிழ் முறைப்படி நடத்த தெய்வீக தமிழ் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் வருகிற 27 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் மற்றும் கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் முழு வீச்சில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் கடவுளாக பக்தர்களால் வணங்கப்படும் முருகன் கோவிலில் நடைபெறக்கூடிய குடமுழுக்கு விழாவில் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் முறைப்படி குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்று தெய்வீக தமிழ் பேரவை வலியுறுத்தி வருகிறது.
பெ. மணியரசன் தலைமையில் தமிழ் ஆர்வலர்களை ஒன்றிணைத்து பழனியில் தமிழ் முறைப்படி குடழுக்கு நடத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழனி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குச்சனூர் கிழார், சித்தர் மூங்கிலடியார், சிம்மம் சத்தியபாமா அம்மையார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பெ. மணியரசன், “பழனி முருகன் கோவிலில் நடைபெறக்கூடிய குடமுழுக்கு விழா சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் முறைப்படி நடத்தப்பட வேண்டும். ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தமிழிலும் குடமுழுக்கு நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது அதனை முழுமையாக பின்பற்றி இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் பழனி கோயிலில் குடமுழுக்கை நடத்த வேண்டும். தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படாமல் உள்ளது. தமிழில் குடமுழுக்க நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது” என தெரிவித்தார்.
