சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டுகேட்டு அதிமுக இரு அணிகளின் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி டி .பிரபாகர்,மனோஜ் பாண்டியன் ஆகியோர் பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரினர்.


பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், இன்று காலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் தொடர்பாக விரிவாக பேட்டி அளித்துள்ளேன். பல்வேறு கேள்விகளை நீங்கள் கேட்டதற்கு பதில்களை இன்று காலை தந்துள்ளேன். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னணி தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம் எங்களது சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இருந்தது.
எங்களது சந்திப்பின்போது மாநில நலன்கள் மற்றும் மத்திய நலன்கள் குறித்து மனம் விட்டு பேசி இருக்கிறோம். இன்று காலையிலேயே தெரிவித்தேன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என தெரிவித்தேன்.தேசிய நலன் கருதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்டால் எங்களது ஆதரவு நிச்சயமாக வழங்கப்படும். அதே நிலைதான் தற்போதும் தொடர்கிறது. இந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வேட்பாளரை அறிவித்தால் உங்களது ஆதரவை வழங்குவீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்காமல் சென்றார்.
இதற்கிடையே பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து இடைத்தேர்தல் குறித்து ஆலோசித்தார்.
