கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாதி எரிந்த நிலையில், கல்லூரி மாணவியின் சடலம் போலீசாரால் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புதுப்பட்டியை சேர்ந்தவர்கள் அழகர்சாமி மற்றும் தாயாரம்மாள் தம்பதி. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்தனர். இவர்களது இளைய மகள் சுபா ஹரிணி கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில், சுபா ஹரிணி நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மகள் தற்கொலை செய்துகொண்டதை அறிந்த பெற்றோர் இந்த தகவலை போலீசாருக்கு தெரிவிக்காமல் உடலை தகனம் செய்ய முடிவு செய்துள்ளனர். அப்பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு சென்று உடலுக்கு நெருப்பூட்டி தகனம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடித்து சுடுகாட்டிற்கு விரைந்து சென்ற போலீசார் எரிந்துகொண்டிருந்த சுபா ஹரிணியின் உடலை தண்ணீர் ஊற்றி அனைத்து, பாதி எரிந்த நிலையில் இருந்த அவரது உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவியின் உடலை போலீசாருக்கு தெரியாமல் பெற்றோர் எரிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.